திங்கள், 27 அக்டோபர், 2008

தீபாவளி தேவையா?

இத்தனை ஆண்டுகால அறிவியல் முன்னேற்றத்திற்கும் பின்னால்  நான் ஏன் தீபாவளி கொண்டாட வேண்டும் என்றுகூட கேள்வி கேட்கத் தெரியாமல் நிற்கும் நம் இனச்சகோதரர்களின் அறிவை என்னவென்று சொல்வது? நம் இனச்சகோதரர்கள் ஈழத்தில் தினம், குண்டுகளுக்கு மடிந்து கொண்டிருக்கும் பொழுது ஆரிய, பார்ப்பன புழுகு பண்டிகை நம்க்கு தேவைதானா?

 

எவனோ கொலை செய்யப்பட்டதற்கு பலகாரம் செய்து கொண்டாடினால் நாம் மனிதர்கள், மனித நேயம் கொண்டவர்கள் என்று சொன்னால் உலகம் எள்ளி நகையாடாதா?எதிரி வீட்டில் இழவு விழுந்தால்கூட நகைப்பதும், மகிழ்ச்சி கொண்டாடுவதும் மனித பண்பும் ஆகுமா?

 

நாட்டில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் உளன்று கொண்டிருக்க அவர்களை மேலும் கடனாளியாக்கும் கொடிய வழக்கம் அல்லவா இந்த பண்டிகை கொண்டாடுவது.

 

பறவைகளுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது என்பதற்காகவே தீபாவளி கொண்டாத ஊர்கள் இந்நாட்டில்தானே உள்ளன?

 

வறுமையின் காரணமாக ஆண்டுக்கணக்கில் தீபாவளி கொண்டாடாமல் இருக்கும் ஊர்களும் இந்நாட்டில்தானே இருக்கின்றன?

 

இப்பண்டிகை கொண்டாட்டத்தினால், ஏற்கனவே விலைவாசி ஏற்றம் என்ற கொடிய நச்சால் நசிந்து போயிருக்கும் எத்தனை எத்தனை பெற்றோர்கள் மீண்டும் ஒருமுறை தம் குழந்தைகளின் முன்னால் தலைகுனிய நேரிடுகிறது என்பதை நாம் ஏன் நம் எண்ணத்தில் நிறுத்துவதில்லை. இப்படி எதை பற்றியும் கவலைப்படாமல், பண்டிகை கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் உங்களை போன்றவர்கள் நாட்டில் ஊழல், வறுமை, கொலை, குண்டுவெடிப்பு என எதை பற்றியும் வருத்தப்படுவதற்கு அருகதை இருக்கிறதா? நமக்கு மட்டும் ஏன் வருத்தங்கள் வருகின்றது என்று வருந்தக்கூட யோக்கியதை இருக்கிறதா? என்று கொஞ்சம் உங்கள் உள்ளத்தை கேட்டு பதில் காணுங்கள்.

 

இதே தொனியில் மக்களுக்காவே சிந்தித்து வாழ்ந்த மாபெரும் தலைவர் பெரியாரின் கூற்றையும், அவருடைய பேரன்பையும் இந்த கட்டுரையில் காணுங்கள்.

 

 

ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்பொருத்தமோ - சொல்லுவதானாலும்
தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? -
என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி(இன்றைய நிலையில் குறைந்தது 50 கோடிபேராவது கொண்டாடியிருப்பார்கள்) மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி(இன்றைய நிலையில் 100 கோடிக்கும்)ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த
10
கோடியும் அனாவசியமாய் - துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய
வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில்
வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்கள்,
சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த-சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு? தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?

தந்தைபெரியார் - குடிஅரசு’, தலையங்கம், 22.11.1931

அமீரின் பேச்சு பாகம்-2

அமீரின் பேச்சு பாகம் 1

ஈழத்தமிழர்களின் அவலம்


இவர்கள் குரல் உங்களுக்கு கேட்கவில்லையா?????  ?? ?

தமிழா! இனியும் உறங்கிக் கொண்டிருந்தால்,  வரலாறு உன்னை மன்னிக்காது. விழித்தெழு!!

தீபாவளிப் பண்டிகை தமிழர்களுக்கு மானக்கேடு

வருடா வருடம் கடவுள்களுக்கு (சாமிகளுக்கு) கலியாண உற்சவம் வருவது போல் வருடா வருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டு இருக்கின்றன. நம் மக்களும் பெரும்பான்மையோர், கடவுளுக்கு உலகில் வேறு எங்காவது கலியாணம் செய்வாருண்டா? கடவுள்தானா கட்டும், கலியாணம் செய்துகொள்ளுமா? அதற்கு அவசியமென்ன? என்கிற அறிவே சிறிதுமின்றி எப்படி கோயில்களில் ஆண்டுதோறும் சாமிகளுக்குக் கலியாண உற்சவம் செய்கிறார்களோ அதே போல் இந்த தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகின்றார்கள்.


இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலையிருப்பதில்லை. ஏதாவதொரு சாக்கு சொல்லி பண்டிகைகள் கொண்டாடவேண்டும். கடவுள் பக்தி, மத பக்தி உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சிலர் (வியாபாரிகள்) பணம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உட்கருத்தை அறிவது என்கிற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.

சாதாரணமாக நம்மைப் போல் உள்ள ஒரு மனிதனை நாம் பிராமணன் என்று கருதி அவனை பிராமணன் என்றே அழைக்கின்றோம் என்றால் அதன் கருத்தென்ன? என்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை. ஒருவனை நாம் பிராமணன் என்றால் நாம் யார்? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நம்மை நாம் எந்தப்படியும் நினைத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட தன் கருத்து என்ன ஆகியது? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நாம் நம்மை சூத்திரன் என்றே ஒப்புக் கொண்டதாகத்தானே ஆகிறது. இந்த அறிவுத் தெளிவு இல்லாததனாலேயே நம்மைப் போன்ற ஒரு மனிதனை பிராமணன் என்று அழைக்கின்றோம்.

நாம் ஏன் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடாமல் வெறுத்து ஒதுக்க வேண்டுமென்பதுமான விஷயங்களைப் பற்றிய பிரசாரங்களும் வேண்டுகோள்களும் செய்து வருவதன் நிலையுமாகும். அது போலவே இக்காரணத்தினால்தான் அதாவது நம்மை இந்த இழிநிலையிலேயே அழுத்தி வைத்திருக்க வேண்டுமென்ற காரணத்தால்தான் இந்த நடத்தைகளால் பலனடைந்து நம்மை இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்திருக்கும் பார்ப்பனர்கள் என்பவர்களின் உற்சவம், பண்டிகை, வர்ணாசிரம சாதிக்கிரமம், அவற்றை அனுசரித்த ஆதராங்களாகிய வேதசாஸ்திர புராண இதிகாசம், அவை சம்பந்தமான இலக்கியம் முதலியவை காப்பாற்றப்படவும் பிரசாரம் செய்வதும், இயல், இசை, நாடகம் மூலம் அவற்றைப் பரப்பி வருவதுமான எதிர் முயற்சிகளும் ஆகும்.

இது பழைய போராட்டமே

இந்த இரண்டு போராட்டங்களும் இந்த நாட்டில் இன்று நேற்றல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கின்றன என்பதை நாம் இன்று அதிகாரப் பூர்வமாக காணலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கிறது என்பதைக் காட்டுவது தான், அதை ஆதிரிக்கத் தூண்டுவதுதான், அந்தத் தன்மையை நிலைத்திருக்கச் செய்வதுதான் இன்றைய உற்சவம், பண்டிகை முதலிய காரியங்களாகும். எதனால் இதை இந்தப்படி நாம் சொல்கிறோம் என்றால் ஏறக்குறைய 100 க்கு 90 க்குக் குறையாத உற்சவங்கள், பண்டிகைகள், நல்ல நாள், கெட்ட நாள், ஏற்பாடுகள், கொண் டாட்டங்கள், விரதங்கள், நோன்புகள் முதலிய அனேக காரியங்களுக்கும் இந்தப் புராண இதிகாசங்களும், சமுதாய நடப்புகளுக்கான சாஸ்திர தர்மங்களுமே காரணங்களாக இருந்து வருவதாலேயே இப்படிக் கூறுகிறோம்.

இந்தக் காரணங்களால், பிராமணன் என்பதாக ஒரு சாதி மகன் இருக்கவும், சூத்திரன் என்பதாக ஒரு சாதி மகன் இருக்கவும் நாமே இடங்கொடுத்து உதவி செய்தவர்களாகி விடுகிறோம். இதனால் பார்ப்பனர்கள், தாங்கள் பிராமணர்கள் (உயர்சாதி) என்று எண்ணிக் கொண்டு நம்மை சூத்திரர்கள் என்றே கருதி மற்றெல்லா விஷயங்களிலும் நம்மைக் கீழ்ச் சாதி மக்களாகவே நடத்தி வருகிறார்கள்.
இது போலவே நாம், இந்த தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் நாம், நம் இழிநிலையை உணராத - மான உணர்ச்சியற்ற மக்களாக ஆகி வேறு யாராவது நமது இழிநிலை ஒழிப்புக்காகச் செய்யும் முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டைப் போட்டவர்களாகி நம் பின் சந்ததிகளுக்கும் மான உணர்ச்சி ஏற்டாமலும் இழிவு படுத்தப்படவும் ஆதரவு தேடி வைத்தவர்களாகி விடுகிறோம்.

இன்று நம் நாட்டில் அரசியல், பொருளியல், கல்வி இயல், சமய, சமுதாய இயல் என்பவைகளின் பேரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும், குறிப்பாக திராவிடர் கழகத்தாரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும், மற்றும் பல பொது முயற்சிகளும் எதை அடிப்படையாகக் கொண்டவை என்று சிந்திப்போமே யானால், உண்மையில் அதன் அடிப்படைத் தத்துவம்., நம் மக்கள் பெரும்பாலோருக்கு அதாவது 100-க்கு 90 பேருக்கு இருந்து வரும் பிறவி இழிவும், அவ்விழிவு காரணமாக நமக்கு இருந்து வரும் பல உரிமை மறுப்புகளும், முன்னேற்றத் தடைகளும் ஒழிய வேண்டும், ஒழிக்கப்பட வேண்டுமென் பதும், நம் எதிரிகளால், அதாவது நம்மை இழிவுபடுத்தி வைத்து நம் உழைப்பால் சுகம் அனுபவத்துக் கொண்டு மக்களின் இந்த நிலையை இப்படியே நீடித்து இருத்தி வைத்திருக்க வேண்டும் என்பதுமான, ஒரு போட்டா போட்டி முயற்சியேயாகும் என்பது புரியும்.

இம்முயற்சி காரணமாகத்தான் நாம் ஏன் ஒருவனை பிராமணன் என்று அழைக்கக்கூடாது என்பதும், நாம் ஏன் உற்சவாதி பண்டிகைகளைக் கண்டிக்க வேண்டும் என்பதும் ஆகும். உதாரணமாக கடவுள் அவதாரங்கள், கடவுள் செய்த யுத்தங்கள், கடவுள் செய்த
(சம்மாரக்) கொலைகள், கடவுள் செய்த வஞ்சக (கபடநாடக)ச் செயல்கள், கடவுள் காலடியில் அழுத்தி மிதித்துக் கொண்டு இருக்கும் சூர, அசுர, ராட்சதாதிகள் முதலியன யாவும் எதற்காக என்று பார்த்தோமானால், இது நன்றாக விளங்கிவிடும்.

கந்த புராணம், பாகவத புராணம், இவை சம்பந்தமான மற்ற இதிகாசங்கள் முதலியன யாவும் சாதிப் போராட்டமாகவும், பிறப்புப் போராட்டமாகவுமே இருந்து வருவதோடு மேல் சாதி என்பதை ஒப்புக் கொள்ளாமல், மேல் சாதி சம்பிரதாயத்தையும், உரிமையையும், நடப்புக்களையும், கீழ்ச்சாதியார் எதிர்த்துச் செய்த புரட்சியான போராட்டங்களாகவே இருந்து வரும்.

இதுதான் தேவாசுர (சுரர் - அசுரர்) போராட்டமாகவும், இராட்சத சம்மாரங்களாகவும் இன்றும் கருதப்பட்டு வருவதாகும். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் சிவன், கந்தன், காளி, விஷ்ணு அவதாரமான ராமன், கிருஷ்ணன், பலராமன், நரசிம்மன், வராகமூர்த்தி, முதலானவர்களும், சுரர் - அரக்கர் முதலியவர்கள் பிராமண தர்மத்தை எதிர்த்ததற்காகவே தோன்றி, எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்தக் கொலைச் செய்கையைப் பாரட்டவும், கொலையைப் பற்றி மகிழ்ச்சியடையும்தான் பண்டிகை உற்சவம் கொண்டாடப்படுகிறது என்றும் கூறலாம்.

ராட்சதர்கள் யார்?

புராண இதிகாச அசுரர்கள், சூரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? தேவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? என்று பார்த்தோமேயானால் முறையே இந்த சூத்திரர்களும், பார்ப்பனர்களும் என்பவரல்லாமல் வேறு யாரைக் குறிக்கிறது? என்று யாராவது ஆதாரம் காட்ட முடியுமா? என்று பார்த்தால் முடியவே முடியாது என்பது அநேக அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்களால் மேதாவிகளால் எழுதப்பட்டிருக்கும் இன்றைய ஆராய்ச்சி நூல்களிலே அறியலாம்.

புராணங்களையே எடுத்துக் கொண்டாலும் பாகவத புராணத்தில் இரண்யன் வதைக் கதையில் இரண்யன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இக்கருத்தைத் தெளிவாய் விளக்குகின்றன. அதாவது இரண்யன் பார்ப்பனர்களுக்கு எதிரி, பார்ப்பனர்களின் உயர் சாதித் தத்துவத்தையும், அவர்களுடைய ஜப, தப மந்தரத் தத்துவத்தையும், ஒப்புக் கொள்ளாதவன், பார்ப்பனர்களை அடிமையாக்கிக் கொண்டு அவர்களிடம் வேலை வாங்குகிறவன், இரண்யன் பிராமணர்களை ஆதரிப்பதற்கு ஆக இவர்களால் ஆக்கப்பட்ட விஷ்ணுவின் சகாயத்தினால் இவ்வளவு அக்கிரமங்கள் செய்வதால் இந்த விஷ்ணுவை முதலில் ஒழிக்க வேண்டும். இந்த விஷ்ணுவுக்கு ஆராதனம், எக்கியம், அவிர்ப் பாகம் செய்யும் பிராமணர்களை அடியோடு ஒழித்து ஆக வேண்டும். ஆதலால், ஓ! தானவர்களே (ஏவலாளர்களே) மண்வெட்டி, கோடரி, கடப்பாரை கொண்டு புறப்படுங்கள் ! பிராமணர்கள் ஜபதபம் ஓமம் செய்யுமிடத்தை அணுகுங்கள்!
அவைகளைத் தரை மட்டமாக்குங்கள்! புறப்படுங்கள் ! என்று சொன்னதாக இரண்யன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது.

இப்படியே இரண்யன் தம்பி மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவன் பூமியையே பாயாகச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது போலவே இராவணன் மீதும், அவன் தேவர்களுக்கு விரோதமாக அவர்களின் யாகாதிகளை அழித்ததாகவும், பார்ப்பனர்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டு வேலை வாங்கியதாகவும், தேவர்களுக்குக் கேடு செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது போலவே கந்த புராணத்தில் சூரன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இவைகள் நடந்தனவோ, இல்லையோ, உண்மையோ, பொய்யோ எப்படி இருந்தாலும் மேல் சாதி - கீழ்ச் சாதி, சூரர்-அசுரர், தேவர்-ராட்சதர்கள் என்னும் பேரால் யுத்தங்களும் தேவர்களால் மற்றவர்கள் கொல்லப்பட்டதுமான கருத்துக்களையும் சங்கதிகளையும் கொண்டதாக இருக்கின்றன என்பதும் யாராலும் மறுக்கமுடியாது. பாகவதத்தில் இரண்யன், பிராமணர்கள் மோசக்காரர்கள், பிராமணர்களை அழிக்க வேண்டும் என்றும் சாதி குறிப்பிட்டுச் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மற்றும் கந்தபுராணமும், இராமாயணமும் பார்த்தால் அவற்றில் வரும் பெயர்கள் மட்டும் வேறு வேறாக இருக்கின்றனவேயொழிய இரண்டும் ஒரே கதையைத்தான் குறிக்கின்றன. கருத்தும் தேவாசுர யுத்தம்தான் என்று எவரும் உணரலாம்.

எனவே இப்படிப்பட்ட அதாவது நமக்குக் கேடும் இழிவும் ஏற்பட்டதான போராட்டத்தில் வரும் உற்சவம், பண்டிகைகள் ஆகியவற்றை நாம் திராவிடர்கள், அதாவது சூத்திரர்கள் என இழித்துக் கூறப்படுபவர்களாகிய நாம் கொண்டாடலாமா? என்பதுதான் இன்றையப் பிரச்சினையாகும்.

தீபாவளி

இப்படிப்பட்ட தத்துவம் கொண்ட பண்டிகைகளில் ஓன்றுதான் தீபாவளி! முதலாவதாக இந்தப் பண்டிகைக்கும், அதன் பெயருக்கும் சம்பந்தமே இல்லையெனலாம். தீபாவளி என்ற சொல்லுக்கு தீப வரிசை (விளக்கு வரிசை) என்றுதான் பொருள். கார்த்திகை மாதத்தில் இது போன்ற ஒரு பண்டிகை கொண்டாடுகின்றார்களே அது இந்தப் பெயருக்குப் பொருத்தமாகலாம். இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாடவேண்டிய அவசியத்துக்காக குறிப்பிடும் நிகழ்ச்சி என்னவெனில், நரகாசுரன் என்ற ஒரு அசுரன் ஒரு தெய்வப் பெண்ணைச் சிறை பிடித்துக் கொண்டான். (கந்த புராணம் - இந்திரன் மனைவியை சூரன் சிறைப் பிடித்த கதை. இராமாயணம் - சீதையை இராவணன் சிறைப் படித்த கதை. தீபாவளி - நரகாசுரன் கசேரு என்ற பெண்ணை சிறை பிடித்த கதை). மற்றும் வேறொரு தெய்வப்பெண் அதிதி என்பவளின் காதணியை கவர்ந்து கொண்டவன். (எதற்காக எப்படிக் கவர்ந்தானோ தெரியவில்லை).

இது தவிர இவன் பிறப்பு வளர்ப்பும் அதிசயமானது. பூமியைப் பாயாகச் சுருட்டிய இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு பன்றியாகத் தோன்றி பூமாதேவியுடன் கலந்து பெற்ற பிள்ளை இவன்! பின் கிருஷ்ணனாலும் அவன் மனைவியாலும் கொல்லப்பட்ட பின் தேவர்கள் சுகமடைந்தார்கள் என்பது கதை! அந்த சுகத்துக்காகத்தான் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டுமாம். அதற்காக தீபாவளி கொண்டாட வேண்டுமாம்.

இதுதான் தீபாவளித் தத்துவம். கதையைக் கவனித்தால் இது சிறிதாவது மனிதத் தன்மைக்கோ, பகுத்தறிவுக்கோ ஏற்றதாக இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? இத்தனை ஆபாசமும், அசிங்கமும் கொண்ட கதையை நாம் தெய்வீகத் தன்மை கொண்டதாக ஏற்று, ஏன் கதைவிட அல்லாமல் உண்மையில் நடந்த தெய்வக் கதையாக ஏற்றுக் கொண்டாடுவதா என்பது யோசிக்கத் தக்கதல்லவா?

நரகாசுரன் ஒரு திராவிட அரசனாகவும் திராவிடத்தை (வங்கத்தை)ச் சேர்ந்த ஒரு பிராகஜோதிஷம் என்னும் நகரை ஆண்டவனாகவும் அதே புராணங்களில் காணப்படுகின்றான். கதை எப்படியிருப்பினும், இவனும் - நரகாசுரனும், இரண்யாட்சன், இரண்யன், இராவணன், சூரபதுமன் முதலிய திராவிடர் தலைவர்களோடு ஒருவனாக மதிக்கப்பட வேண்டியவன் ஆவான். இவன் தன்னைப் பெற்ற தகப்பனால், தாயால் கொல்லப்பட்டதாகக் கதை கூறுகிறது. காரணம் தேவர் களுக்குத் தொல்லை கொடுத்ததால் என்கிறது புராணம். ஆகவே இன்று நாம் (திராவிடர்கள் - தமிழர்கள்) இரண்யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கின்றோமோ அது போலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட நம் தலைவனை தேவர் கூட்டம் கொன்றதற்கு நாம் துக்கப்பட வேண்டுமே ஒழிய மகிழ்ச்சியடைவது மடமையும் இழிவும், மான ஈனமுமாகும்.

ஆதலால், திராவிட மக்கள் அனைவரும், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடக்கூடாது என்று வேண்டிக் கொள்வதோடு, திராவிடர் கழகத்தவர் கண்டிப்பாகக் கொண்டாடக்கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம். தீபாவளியன்று கருப்பு உடை தரித்து நரகாசுரனுக்கு (திராவிடர் தலைவனுக்கு) வாழ்த்துக் கூறி வலம் வருவதுடன் ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காக துக்கப்பட வேண்டியதை விளக்கி துக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

(சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை - "விடுதலை" 7.11.1963
)


http://www.keetru.com/rebel/periyar/99.php

வெள்ளி, 10 அக்டோபர், 2008

காலம் அரித்திடாது எம் இணைப்பை-கி.பி.அரவிந்தன்

01.1987 ஆம் ஆண்டு சிறிலங்கா - இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட வேளையில் சில ஈழப்போராளிகள் உட்பட பலரிடமும் அரசியல் தீர்வு பற்றிய ஒரு மயக்கநிலை தோற்றம் பெற்றிருந்தது. ஈழப்போராட்டத்தின் பின்தளமாக இருந்த தமிழ்நாட்டை விட்டு பணியகங்களையும் மூடிவிட்டு ஈழப்போராளிகள் தாயகத்திற்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். அப்போது நான் ஈழ நண்பர் கழகத்தின் வெளியீடாக வந்துகொண்டிருந்த நட்புறவுப்பாலம்இதழில் விடைபெறும் நேரம்..என ஒரு கடிதம் எழுதினேன்.

அக்கடிதத்தின் இறுதி வரிகளாக நண்பர்களே இது விடைபெறும் நேரம்தானா என்பது தீர்மானமாகவில்லை. ஆனாலும் எங்கள் நினைவுகள் உங்களின் அன்பு நட்பு தோழமை இவற்றையே தாங்கியுள்ளன. உங்களிடமும் இவற்றையே கையளித்துள்ளோம்.என எழுதி ஓக். 87 என கையெழுத்திட்டிருந்தேன்.

காலம் இருபது ஆண்டுகளைத் தின்று முடித்துவிட்டது. துன்பியல் நிகழ்வுகள் பலவற்றுக்கு நாம் சாட்சியமாகியும் விட்டோம். இப்போதெல்லாம் அன்றைய நாட்களைப்போல் ஊடும்பாவுமாக நாம் வாழ்வதற்கு இந்திய நாட்டின் சட்டங்கள் இடம்கொடுக்குமா எனத் தெரியவில்லை. தற்போது உங்களிடம் இருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் அலைந்து உழன்று கொண்டிருக்கிறேன்.

புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையில் நானும் ஒரு தலையாக இணைந்துவிட்டேன். ஆனால் என்னுள்ளான நெருப்பை என்றும் நான் அணைய விட்டதுமில்லை, எனக்கான தேசியப் பணிகளைக் கைவிட்டதுமில்லை. அப்பணியாக இக்கட்டுரையையும் எழுதுகின்றேன்.

நண்பர்களே,

எத்தனையோ துயர துன்பியல் நிகழ்வுகளையும் தாண்டி ஈழப்போராட்டம் விரிவுபெற்று சில எல்லைகளைத் தொட்டு நிற்கின்றது. அதேபோல் மரணத்துள்ளான வாழ்வும் மாற்றமின்றித் தொடர்கின்றது. இனப்படுகொலை முன்னெப்போதையும் விட சிறிலங்கா அரசால் சர்வதேச அங்கீகாரத்துடன் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இதற்கு காந்தியை மகாத்மாவாகக் கொண்டாடும் உங்கள் தேசமும் உடந்தையாக இருக்கின்றது என்பதற்கு வவுனியா படைத்தளம் சாட்சியமாகி உள்ளது.

பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற முடிவிலேயே இந்திய தேசம் ஈழத்தமிழர்கள் மீதான தனது நகர்வுகளை மேற்கொள்கின்றது. இந்திய தேசம் அரசியல் இராஐதந்திரத்துடன் நடக்கின்றதா அல்லது வர்ணாச்சிரம தர்மத்தை முன்னிறுத்துகின்றதா என்பதே இன்றைய கேள்வி. இந்தச் சூழலே நாம் விடைபெற முடியாதவர்கள், இன்னும் நெருக்கமாக இணைந்திருந்து பணியாற்ற வேண்டியவர்கள் என்பதை உணர்த்தி நிற்கின்றது.

முன்னெப்போதையும் விட அயல் தேசமான இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தார் தமது கண் காதுகளைச் சின்னஞ்சிறிய இலங்கைத்தீவின் சந்து பொந்துகளில் எல்லாம் விதைத்து வைத்திருக்கின்றனர்.

சர்வதேசம் துயருறும் மக்களுக்காகப் போராடும், சமூத்திற்கு நியாயம் வழங்கும் என்றுதானே நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நான் உங்களுடன் தமிழ்நாட்டில் 1978 முதல் 1988 வரை இருந்த காலத்தில் சர்வதேசத்தைப் புரிந்துகொண்டதைவிடவும் புலம்பெயர்ந்த வாழ்வியலின் பின்னணியில் மிகத் துல்லியமாக அதனைப் புரிந்துகொள்ள முடிந்துள்ளது.

எல்லாமும் திருப்பபட்டாயிற்று

வட அத்திலாந்திக் கரைகளுக்கு

கரை தொட்ட தேசங்களுக்கு.

வந்து வந்து சேர்கின்றன பார்

அறுத்தெடுத்த ஈரல் குலைகள்

துடிதுடிக்கும் இதயங்கள்

உருவி எடுக்கப்பட்ட நாடி நரம்புகள்

பதனமான முகங்கள்

கனிமச் சத்தும்

எண்ணெய்க் கொழுப்பும்

ஊறின தேறல்

ருசி என்ற ருசி..

இதுதான் சர்வதேசம். புலம்பெயர்ந்ததனால்தான் இப்படிப் புரிந்து என்னால் கவிதை எழுத முடிந்தது.

சர்வதேசம் விடுதலை அவாவும் சமூகங்களுக்கு தன் நலன்களுக்கு அப்பால் எங்கும் ஒத்தாசை புரிந்ததோ அமைதியை ஏற்படுத்தியதோ தீர்வை வழங்கியதோ கிடையாது. அது கிழக்குத் தீமோராக இருக்கலாம் கொசொவோவாக இருக்கலாம் எல்லா இடத்திலும் தன் நலன்களையே இந்தச் சர்வதேசத்தார் முன்னிறுத்தி உள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கனிமச் சத்தும் எண்ணெய்க் கொழுப்பும் ஊறின தேறலுக்காகவே அவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சின்னஞ்சிறு தீவில் சர்வதேசத்திற்கு என்ன நலன்கள் இருக்க முடியுமென நீங்கள் சிந்திப்பது நியாயமானதொன்றே. அதுவும் துணைக்கண்டமான இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்பும், பெருமளவான மூலவளமும் இல்லாத இலங்கைத் தீவிற்கு சர்வதேசம் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பது பலருக்கும் புரியக்கூடியதொன்றல்ல.

இந்தியாவின் எல்லைகளைத் தொட்டு நிற்கும் இந்துமாக் கடலிடையேயான இலங்கைத்தீவின் அமைவிடமே அதன் பலமும் பலவீனமுமாகும். அவ்வமைவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக புவிசார் அரசியலில் சர்வதேச நலன்களுடன் பின்னிப் பிணைந்துள்ளதே அதன் பலவீனம். அதனாலேயே ஈழப் போராட்டம் நீண்டு செல்ல வேண்டியதாக உள்ளது.

இந்து சமுத்திர நாடுகளின் நிலை, இவ்வல்லரசுகளின் போட்டிக்குள் ஏதோ ஒரு வகையில் சிக்குண்டு, தமது சுயாதிபத்தியத்தை இழந்து, அமைதியை இழந்து வாழவேண்டிய துர்ப்பாக்கியம் உள்ளதாய் இருக்கின்றது.என 70 ஆம் ஆண்டில் முகிழ்ந்த இளந்தலைமுறையைச் சேர்ந்த இரு அரசியல் அறிஞர்கள் 1987 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ஆய்வு நூலான இந்து சமூத்திரமும் இலங்கை இனப்பிரச்சனையும்எனும் நூலில் தெரிவித்திருக்கின்றனர்.

அதாவது, ஈழத்தமிழரை அழிக்கும் சிறிலங்கா அரசிற்கு அமெரிக்காவும் ஆதரவு அதேவேளையில் அமெரிக்காவை கிலிகொள்ள வைத்திருக்கும் எதிரியான சீனாவும் ஆதரவு. தமிழ்மொழி பேசும் மக்களை ஒரு மாநிலமாக கொண்டிருக்கும் இந்தியாவும் ஆதரவு. நாள்தோறும் இந்தியா மீது யுத்தப்பிரகடனம் செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தானும் ஆதரவு. என்ன வேடிக்கை பாருங்கள். இதில் ஈழப்போராட்டம் எவர் நலனையும் சாந்திருக்காததே சட்டாம்பிள்ளையான சர்வதேசத்திற்கான சிக்கலாகும்.

உலகின் பல்வேறு தேசிய இனச் சிக்கல்களில் சர்வதேசம் புகுந்து விளையாடி அவ்வினங்களின் விடுதலை அவாவை கருவறுத்ததை வெற்றியாகக் கொண்டாடி வருகின்றது. அவர்கள் கருவறுத்ததின் சாட்சியமாக நாம் பாலஸ்தீனத்தைக் கொள்ளலாம். அதன் சோகக்கதையை நான் விரிவாகக் கூறவேண்டியதில்லை. ஈழப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இன்று என்ன நிலையில் உள்ளது பாலஸ்தீனம்?

அதேபோல் ஈழப்போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதும் அதன் வீரியத்தை மங்கச் செய்து முழங்காலில் இருக்க வைப்பதுமே இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் முயற்சியாகும். சர்வதேசம் வழங்கும் ஆதரவும் துணிச்சலும்தான் சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்களை அழிக்கும் இனச்சுத்திகரிப்பிற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது. இன்றைய ஈழப்போராட்டமானது சிறிலங்காவிற்கு எதிராக மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் எதிர்முகம் கொடுக்க வேண்டி உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்நிலையில்தான் உங்கள் அன்பும் நட்பும் தோளணைவும் எமக்குத் தேவையாக இருக்கின்றது.

1983 ஆம் ஆண்டு யூலைப் படுகொலை நிகழ்வுகள் யாராலும் மறக்கக் கூடியதொன்றல்ல. நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். இந்த ஆண்டு அதன் 25 ஆம் நினைவாண்டு. 1983 ஆம் ஆண்டு இந்நிகழ்வின் போது நான் உங்களுடன் இருந்தேன். அந்த நிகழ்வு தமிழ்நாட்டில் ஏற்படுத்திய எதிர்வினைகள் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியின் பணியகமான பாலன் இல்லம் வந்ததும் அங்கு கட்சியின் பொறுப்பாளர்களான தோழர்கள் பலரைச் சந்தித்து நிலமையை விளக்கியதும் நன்கு நினைவில் இருக்கின்றது.

இடதுசாரிக் கட்சிகளின் மாணவர் அமைப்பினர் (ASFI - SFI) அன்று பலம் பொருந்தியவர்களாக செயல் வேகம் கொண்டவர்களாக இருந்தனர். அவ்வேளையில் சென்னை சட்டக்கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பாக் கல்லூரி, அரசினர் கலைக் கல்லூரி, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லுரி ஆகியவற்றின் விடுதிகளில் கூட்டங்கள் நடாத்தியதும், அக்கல்லூரிகளின் மாணவப் பிரதிநிதிகளைச் சந்தித்ததும் பின்னர் அவர்கள் எல்லோரும் தெருக்களில் இறங்கி ஊர்வலம் போனதும் ஒரு மக்கள் எழுச்சியாக மாறியதும் அரிய தருணங்கள் அவை.

அக்காலகட்டம் மீள உருவாகின்றதோ என்பதைத்தான் உங்கள் நடவடிக்கைகள் எமக்கு உணர்த்துகின்றன. கட்சிகளுக்கு வெளியேயான தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியும், திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களும் எமக்காகக் களமிறங்கி குரல் கொடுத்ததைப் பார்த்தபோது 1983 அரிய தருணங்கள்தான் நினைவில் எழுந்தன.

இன்று கம்யூனிஸ்ட் கட்சியினராகிய நீங்களும் ஏறத்தாழ அனைத்துக் கட்சியினரையும் இணைத்து நடத்தும் இந்த உண்ணாவிரதமும் அதற்குச் சான்றாக அமைகின்றது. அதுவும் காந்தியைக் குறியீடாக்கி அவரது பிறந்த நாளில் போராட்டத்தை நடாத்துகிறீர்கள். ஈழப்போராட்டமும் காந்திய சிந்தனையிலேயே வளர்ந்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

02.

இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றில் 1930 ஆம் ஆண்டினை மையமிட்ட காலகட்டம் கவனத்தில் கொள்ளவேண்டியது ஒன்றாகும். 1948 ஆம் ஆண்டில் இலங்கைத் தீவுக்குச் சுதந்திரம் வழங்கிய சோல்பரி அரசியல் யாப்புக்கு முன்னரான டொனமூர் சீர்திருத்தம் அக்காலகட்டத்தில்தான் நடைமுறைக்கு வந்திருந்தது.

டொனமூர் சீர்திருத்தத்தின்படி இனவாரி பிரதிநித்துவம் கைவிடப்பட்டு பிரதேசவாரி பிரதிநித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் கல்வி கற்ற உயர்மட்ட மக்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த வாக்குரிமையை மாற்றி 21 வயதிற்கு மேற்றபட்ட ஆண் - பெண் இருபாலாருக்குமான சர்வசன வாக்குரிமை அறிமுகமானது. டொனமூரின் இந்தச் சீர்திருத்தம் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குறிப்பாக பிரதேசவாரி பிரதிநித்துவம். இதனை எதிர்ப்பதில் யாழ்ப்பாண இளைஞர் பேரவை (Jaffna Youth Congress) முக்கிய பங்காற்றியது.

Srilanka warஇந்த யாழ்ப்பாண இளைஞர் பேரவைத் தலைவர்களாக அறியப்பட்ட ஒறேற்றர் சுப்பிரமணியம், ஹண்டி பேரின்பநாயகம், கு.நேசையா போன்றவர்கள் காந்திய சிந்தனையின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தனர். தங்கள் வாழ்வியலில், செயல்பாடுகளில் காந்திய வழிமுறையையே கடைப்பிடித்தனர். அத்தலைவர்கள் தங்கள் காந்தியப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் மகாத்மா காந்தியை இலங்கைக்கு - குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சிறப்பித்தனர்.

1970களில் நான் இளைஞனாக அரசியலில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் திரு.கு.நேசையா அவர்களை பொது நிகழ்வுகளில் பல தடவைகளில் பார்க்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டது. அவ்வேளைகளில் எல்லாம் அவரை நான் வெள்ளைக் கதராடையுடனேயே பார்த்திருக்கிறேன். அவரது ஆடை அவரை ஒரு காந்தியவாதியாகவே எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. அவரது பேச்சுகளிலும் காந்தியமே மிகுந்திருந்தது.

1949 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான சா.ஜே.வே.செல்வநாயகம் ஈழத்துக் காந்தியென்ற அடைமொழியுடன் ஊடகங்களாலும் மக்களாலும் புகழப்பட்டார். சாத்வீக வழியிலான போராட்டத்தையே அவர் அரசியல் வாழ்வில் முன்மொழிந்தார். அதன் வழியையே கடைப்பிடித்தார். தனது தலைமையில் தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராக 1956 ஆம் ஆண்டில் நடாத்திய போராட்டத்தையும், 1961 ஆம் ஆண்டில் நடாத்திய சத்தியாகிரகப் போராட்டத்தையும், சாத்வீகப் போராட்டம் என்ற காந்திய வழிப்போராட்டம் என்றே அறிவித்தார்.

அதில் அவரும் அவரது சகாக்களும் வன்முறையாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர் இறக்கும் வரையில் தனது கொள்கை வழிப்போராட்டத்தை அவர் கைவிடவே இல்லை. ஆனால் அவர் இறப்பதற்கு முன்னால் தனது சாத்வீக நடவடிக்கைகள் எதும் வெற்றியளிக்காத நிலையில் கடவுள்தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்எனக் கூறிச்சென்றார்.

1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக தமிழர்களின் கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கிய திரு.ச.ஞானமூர்த்தி அவர்கள் காந்திய நெறிமுறையிலேயே வாழ்ந்து பணியாற்றினார். ஏறத்தாழ 1930களில் செயல்பட்ட தலைவர்களில் இருந்து ஈழத்துக் காந்தியெனப் புகழப்பட்ட சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள் காலமான 1977 வரையில் இலங்கைத்தீவின் அரசியலரங்கில் செயற்பட்ட தமிழர் தலைவர்கள் அனைவரும் காந்திய நடைமுறைகளையே கடைப்பிடித்தனர்.

இன்னும் சிறப்பாக கூறுவதானால் 1987 ஆம் ஆண்டில் சிறிலங்கா - இந்திய உடன்படிக்கையின் அடிப்படையில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவம் நுழையும் வரையில் காந்தியும் காந்திய சிந்தனையும் செல்வாக்கும் நம்பிக்கையும் மிக்கதாகவே இலங்கைத் தமிழர்களிடம் காணப்பட்டது. ஈகைச்சுடர் திலீபன் அந்த நம்பிக்கையிலேயே உண்ணா நோன்பை முன்னெடுத்தான். ஆனால் அவன் இறக்க நேரிட்டது காந்தியின் பிம்பத்தை காந்திய நம்பிக்கையை இலங்கைத் தமிழ் மக்களின் நினைவுகளில் இருந்து உடைத்தெறிய வழிவகுத்து விட்டது என்பதே உண்மையாகும்.

அபயக்கரம் கேட்டோர் மேலே

அகண்ட காலால் மிதிக்கலாச்சா

பஞ்சசீலமும் மறந்து போச்சா

காந்தி கைத்தடி துவக்குமாச்சா..

என ஈழத்துக் கவிஞர்கள் தங்கள் ஏமாற்றத்தைப் பதிவு செய்தனர்.

1970களில் முகிழ்ந்த புதிய தலைமுறையினரே காந்திய வழியின் போதாமையைக் கவனத்தில் கொண்டு மாற்றுவழிகளைக் கண்டடைந்தனர். அம்மாற்று வழியும் பட்டறிவும்கூட வெளியில் இருந்து யாரும் கற்பித்தவை அல்ல. 1965களின் பின்னால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் எழுச்சி பெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டங்களிலும் அதன் பட்டறிவிலும் இருந்தே மாற்றுவழி உருவாக்கம் பெற்றது.

1974 ஆம் ஆண்டில் களப்பலியான பொ.சிவகுமாரன் அம்மாற்று வழியின் முதல் பயணியாவான். மாற்று வழி கண்டறியப்பட்டபோதும் காந்தியம் என்னும் அமைப்பும், அறவழிப்போராட்டக் குழுவும் காந்தியச் சிந்தனையில் செயற்பட்டு வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

03.

1983 ஆம் ஆண்டில் நடந்த இனப்படுகொலைதான் ஈழப்போராட்டத்தின் தொடக்கம் என்னும் கருத்து இன்றும் உங்களில் சிலருக்கு இருக்கின்றதோ என்று ஐயுறுகின்றேன். அண்மையில் இளம் படைப்பாளி சோமீதரனின் இயக்கத்தில் வெளிவந்த எரியும் நினைவுகள் என்னும் ஆவணப்படம் 1981 ஆம் ஆண்டு நிகழ்வுகள் பற்றிப் பேசுகின்றது. அதனை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். யாழ்பாண நூலகம் எரிக்கப்பட்ட கதையை பேசும் அந்த ஆவணப்படம் அந்த ஆண்டைச் சுற்றியதான வேறு விடயங்களையும் பேசுகின்றது.

1983 ஆம் ஆண்டுக்கு நிகரான வன்கொடுமை இரண்டாண்டுகளுக்கு முன்னர் 1981 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது பற்றி காட்சி விபரணத்துடன் பேசுகின்றது. கட்டாயம் பாருங்கள். அதற்கும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்கொடுமை பற்றி நீங்கள் அறியாதிருக்கக்கூடும். தமிழ்நாட்டில் எங்களால் வெளியிடப்பட்ட லங்காராணிநாவல் அந்தக் காலகட்டப் பின்னணியில் விரிகின்றது.

தற்போது அது மூன்றாவது பதிப்பாகத் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படியே பின்னுக்குப் பின்னுக்குச் செல்லச்செல்ல இந்த ஈழப்பிரச்சனையின் வேர்களை நீங்கள் நன்கு அறிய முடியும். அப்போதுதான் உங்களால் இவை வெறும் அதிகாரப் பரவலாக்கல் பிரச்சனை அல்லவென உணரமுடியும். ஆதலால் பின்நோக்கிய சில வரலாற்று விடயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில் காலத்திற்குக் காலம் இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்ட அறிஞர்களைக் கொண்ட குழுக்கள் இலங்கைக்குத் தேவையான அரசியல் சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்தன. இதன்படி 1927 ஆம் ஆண்டில் டொனமூர்என்பவரால் பரிந்துரைக்கப்பட்ட சீர்திருத்தத்தின்படி, பிரதேசவாரி பிரதிநித்துவம் ஒழிக்கப்பட்டு இனவாரி பிரதிநித்துவம் அறிமுகமானது. அதன்பயனாக 1936 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மந்திரி சபை தனிச் சிங்கள மந்திரிசபையாகபரண் ஜெயதிலகாவால் அமைக்கப்பட்டது.

அப்போது பரண் ஜெயதிலகா கூறிய கூற்று, கடந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கெதிராக வெளியிடப்பட்ட இனவெறிக் கருத்துக்களில் மிகவும் மோசமானதும் முதன்மையானதுமாகும். அவர் இவ்வமைச்சரவை ஏன் அமைக்கப்படுகிறதென்றால் சிறுபான்மையினராகிய உங்களின் (தமிழர்களின்) தயவின்றி எங்களால் (சிங்களவர்களால்) ஆட்சியமைக்க முடியும்; எங்களுக்கும் திறமையுண்டு; உங்களுக்கு உரிமை வேண்டுமானால் எங்களைக் கேட்டுத்தான் பெறவேண்டும் எனக் காட்டுவதற்குத்தானஎனும் கருத்துப்படக் கூறியுள்ளார்.

பின்னாட்களில் சிறிலங்காவின் பல தலைவர்களும் இத்தொனியில் கருத்துரைத்துள்ளனர். அண்மையில் காலமான சிறிலங்காவின் அதிபராக இருந்த டி.பி.விஐயதுங்கா, சந்திரிகா குமாரதுங்கா போன்றவர்கள் இக்கருத்துக்களை மறுவுருவாக்கம் செய்துள்ளனர். கடந்த வாரத்தில் சிறிலங்காவின் இராணுவத்தளபதியும் அவற்றைப் பின்பற்றி திருவாய் மலர்ந்தருளி உள்ளார்.

இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற பத்து மாதத்திற்குள் 19.11.1948 ஆம் ஆண்டில் பெரும்பான்மை அரசால் (சிறிலங்கா) கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் மூலம் தமிழருள் ஒரு பகுதியினரின் குடியுரிமை மறுக்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் நாடற்றவர்களானார்கள். 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் 8 உறுப்பினரைப் பாராளுமன்றத்திற்கனுப்பிய மக்கள் இச்சட்டம் கொண்டு வந்ததின்பின் எந்த ஒரு உறுப்பினரையும் அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டது.

1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் வந்தால் 24 மணி நேரத்தில் சிங்களத்தை மட்டும் ஆட்சிமொழியாக்குவோம்என அறிவித்தனர். அறிவித்ததின் மூலம் S.W.R.D பண்டாரநாயக்கா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிங்களப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்ததின் மூலம் ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். 1956 ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்தவர்கள் சூன் மாதம் தாங்கள் அறிவித்தபடி சிங்களம் மட்டும்எனும் சட்டத்தைக் கொண்டு வந்தனர்.

1958 ஆம் ஆண்டு சனவரியில் இன்னொரு சட்டம் இதே ஆட்சியினரால் கொண்டு வரப்பட்டது. அச்சட்டத்தின்படி வண்டிகளில் பொறிக்கப்படும் எண்ணின் முதலெழுத்து ஸ்ரீஎனச் சிங்களத்தில் குறிப்பிடப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் ஈழ நிலப்பகுதியான கிழக்குப்பகுதியில் கல்லோயா அபிவிருத்தித் திட்டம்எனும் பெயரில் சிங்களவர் குடியேற்றப்பட்டனர். இதன் மூலம் தமிழரின் நிலப்பகுதியைப் பறிக்கும் படுபாதகமான திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈழப்பகுதிகளில் அரசு உதவியுடன் சிங்களவர் குடியேற்றப்பட்டனர்.

மேற்படி நடவடிக்கைகள் காரணமாகத் தமிழருக்கும் சிங்களவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு 1958 ஆம் ஆண்டில் மிகப்பெரும் கலவரமாக உருவானது. பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்களின் மார்புகளில், தொடைகளில் சிங்கள சிறி’ (ஸ்ரீ) குத்தப்பட்டது. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. சிறிலங்காவிலிருந்து தமிழர்கள் ஈழத்தை நோக்கி ஓடி வந்தார்கள். சிறிலங்காவின் தலைநகரான கொழும்பிலிருந்து தமிழர்கள் கப்பலில் அனுப்பப்பட்டனர்.

நீங்கள் அறிந்திருக்கும் 1983 ஆம் ஆண்டில் மட்டுமல்ல 1977 இல், 1958 இல் எல்லாம் தமிழர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணம் திருக்கோணமலை ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டனர். அப்போது ஈழத்தமிழர்களின் தாயகம் எதுவாக இருக்க முடியும். இலங்கைத்தீவின் வடக்கு - கிழக்கு பிரதேசங்கள்தானே.

இன்றைக்கு ஈழப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக உள்ளதற்கும், அதன் விடுதலை அவாவாக தமிழீழம் தனியரசாக வேண்டுமென்பதற்கும் 1983 ஆம் ஆண்டுதான் காரணம் என்பதல்ல. ஈழத்தமிழர்களுக்கான தாயகக் கோட்பாடு 1920களில் இருந்தே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1977ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் வாக்களித்ததன் மூலம் தமிழர்க்கான தாயக விடுதலைக் கோட்பாடு மக்கள் ஆணை பெற்ற அரசியல் கோரிக்கையாக மாற்றப்பட்டது.

அதுவே இன்றைய தலைமுறையினரிடம் அது கைமாற்றப்பட்டிருக்கின்றது என்பதே உண்மையாகும். அதனையே 1984 ஆம் ஆண்டு திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது போராளிகளும் மிதவாத தலைவர்களும் இணைந்து நான்கு அம்சம் கொண்ட கோரிக்கையாக முன்வைத்தனர். 1970களின் பின்னால் முகிழ்ந்த இப்போராளித் தலைமுறை காந்தியத்தில் நம்பிக்கை இழந்து ஆயுத வழிப் போராட்டத்தில் தங்கள் முன்னோரின் கோரிக்கைக்காக போராடி வருகின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அப்போராட்டத்திற்கு தலைமை அளித்து போராட்டத்தை நெறிப்படுத்தி வருகிறார்கள். ஈழப்போரட்டத்தின் வெற்றியிலேயே உலகத் தமிழினத்தின் வாழ்வும் வரலாறும் தங்கியுள்ளது. ஏனெனில் வரலாறு என்பதே வெற்றி பெற்றவர்களுக்குத்தான்.

நண்பர்களே,

ஈழப்போராட்டத்திற்கு முன்னுதாரங்கள் எதுவுமில்லை. உலகின் எந்த வல்லாண்மையாளரின் நலன்களுக்காகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை. எங்கள் கால்களில் எங்கள் பலத்திலேயே நாங்கள் தங்கி இருக்கிறோம். நாங்கள் விடுதலை அவாவும், மனித நேயத்தை முன்னிறுத்தும், மற்றவர்கள் உரிமையை மதிக்கும், நட்பை தோழமையையே தேடுகின்றோம். உங்களிடமும் அதனையே எதிர்பார்க்கிறோம். உங்களின் தோளணைவு வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

நட்புடனும் தோழமையுடனும்

கி.பி.அரவிந்தன்.

(நன்றி: தமிழ்நாதம்)

நன்றி: கீற்று இணையம்

பெரியார்!

1.வாழ்நாள்:
------------
ஆண்டுகள்:94(3 மாதங்கள், 7 நாள்கள்)
மாதங்கள் :1131
வாரங்கள் :4919
நாள்கள் :34,433
மணிகள் :8,26,375
நிமிடங்கள்:4,95,82,540
விநாடிகள்:297,49,52,400

2.
சுற்றுப்பயணம்:
-----------------
நாள்கள்:8200
வெளிநாடுகளில்:392
தொலைவு:8,20,000 மைல்கள்
ஒப்பீடு: பூமியின் சுற்றளவைப்போல் 33மடங்கு. பூமிக்கும் சந்திரனுக்கும்
உள்ள தொலைவைப்போல் 3 மடங்கு.

3.
கருத்துரையும் நிகழ்ச்சிகளும்:
----------------------------
கலந்துகொண்டநிகழ்ச்சிகள்:10,700
கருத்துரை ஆற்றிய காலம்:
-------------------------
மணிகள் :.......21,400
நாள்கணக்கில்:....891
நிமிடங்களில்:.....12,84,000
வினாடிகளில்:.....77,04,000

சிறப்புக்குறிப்பு:
-------------
அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில் பதிவு செய்திருந்தால் அது
2
ஆண்டுகள், 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே
இருக்கும்.