திங்கள், 11 மே, 2009

கருணாநிதி - ஜெயலலிதா கூட்டு

தோழர் ஒருவர் ஐயா கலிபூங்குன்றனின் கவிதையை அனுப்பி வைத்தார்,எண்ணற்ற கேள்விகள்எழுந்தன, அதில் கிறுக்கியவை கீழ்க்கண்டவை

http://files.periyar.org.in/viduthalai/20090509/snews01.html

http://thamizhoviya.blogspot.com/2009/05/blog-post_3993.html

ஜெயலலிதா என்னும் பார்ப்பன பாசிசப் பேயை மட்டும் எதிர்த்து எழுதியதல்ல! பார்ப்பன பாசித்தின் அடிவருடிகளுக்கும் சேர்த்து எழுதியது.....


//தந்தை பெரியாரின் தொண்டரென்று பகரும் தோழர்களே,


பெரியாரின் பேரனென்று பெருமை பேசும் 'கலை'வாணர்களே!


இனவுணர்வு என்று இடி முழக்கம் செய்வோரே,


எங்கே போகின்றீர்?


யாரைத் தூக்கிச் சுமக்க தாவி நிற்கின்றீர், தடம் மாறித் தவிக்கின்றீர்?//


தவறுதான்,எங்களை தூக்கி சுமக்க, கரையேற்ற வேண்டிய தமிழினத்தலைவர்கள் (?) ரவுடி அரசியலுக்கு பல்லக்கு தூக்கும் பொழுது திக்கற்றவர்களாய்,எங்கு போய் அழுவது. ஈழத்தில் எம் சகோதரன் சாகக்கிடக்க, படுத்த இடத்தில் சிதறி வெடிக்க, இங்கு கொள்கையில் வாயளவில் பேசி, எங்கள் வாய்க்கு பூட்டும் போட நினைத்தால் என் செய்வது.

//தாயே தயாபரியென்று யாரிடம் மடிப் பிச்சை?


அருள் தாராய் தேவியென்று ஆரிடம் பிரார்த்தனை


தோத்திரம் செய்கின்றீர் - துந்துபி முழங்குகின்றீர்?


ஒருகணம் ஒரே ஒரு கணம் சிந்தித்ததுண்டா?//



ஆரியப்பேயை கெஞ்சும் நிலைக்கு எம்மை யார் ஆளாக்கியது, இத்தாலி பேயின் காலடியில் எம்மை விழச்சொல்லி ஓட்டுக் கேட்கும் துரோகத்தலைவர்களுக்கு, இந்த கேள்வியை கேட்க என்ன தகுதியிருக்கிறது, என்று எங்கள் தெருவில் கோலி விளையாடும் சிறுபிள்ளை கேட்கிறான் பதில் சொல்லுங்கள்.



இந்திய ஆளும் வர்க்கமே பார்ப்பனிய பனியா கும்பலுடையது, காங்கிரசு மட்டும் என்ன இதில் விதிவிலக்கா?



ஜெயலலிதா பாப்பாத்தி, நாம் மறுக்கவில்லை, அதை அந்த பாப்பாத்தியும் மறைத்ததில்லை, சட்டமன்றத்தில் நேரடியாக அறிவித்தார். அப்படியிருக்க இப்பொழுது வீராவேசமாக கேள்வி கேட்கும் தோழர்கள் ஜெயலலிதாவிடம் சரணடையச் சொல்லி எம்மை(பெரியாரிய தோழர்களை) மூளைச்சலவை செய்தனரே, சமூகநீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்து மகிழ்ந்தனரே!



பாப்பத்தி காலில் விழச்சொல்லும் பொழுது இதை சிந்தித்திருந்தால்; இப்பொழுது இவர்கள் சொல்வதை நாமும் சிந்திக்கலாம்.



பெரியாரியலே தமிழகம் முழுக்க பரவியிருக்க வேண்டிய சூழலில், எம் தந்தை பெரியாரை மறக்க செய்த, பெரியாரே யாரென்று தெரியாமல் வளரும் தலைமுறையை உருவாக்கி தந்த திராவிட பேய்களை உரிமையோடு கண்டிக்கக்கூட துப்பில்லாமல், ரவுகளின் கூடாரமாய் யார் ஆக்கியது. யார் குற்றம்.



தமிழகத்தின் பிரதிநிதியாய் அழகிரிதான் போக முடியுமென்றால், களத்தில் நின்று சமூகநீதிக்காய் உண்மையாய் உழைக்கும் தொண்டன் அழகிரியின் தகுதிக்கு குறைச்சலா என்ன?


//சீர்தூக்கிப் பார்த்ததுண்டா? பிரபாகரன் பேரழிவு சக்தியென்று


பீரங்கியாய் முழங்கியவர் பெற்றன்னையாய் மாறி விட்டாரா?


பேரன்பைத்தான் பொழிந்தாரா?//


பிரபாகரன் பேரழிவு சக்தி, அவர் சர்வாதிகாரிஇது இருவேறு தலைவர்களால் சொல்லப்பட்டது என்று நம்ப இயலுமா? நஞ்சுப்பால் சுரக்கும் மார்பானாலும் பசியால் துடிக்கும் குழந்தைக்கு தன்னையறியாமல் மார்பகத்தை முற்றுகையிடும். தமிழினம் அழும் குழந்தையாய் மார்பகத்தை முற்றுகையிட்டிருக்கிறது, பசி போகாதா? என்று. மீண்டும் நஞ்சு சுரந்தால் மார்பறுக்கும் திராணி பெற வேண்டும் என்பதுதான் நம் நிலைப்பாடு. பாப்பாத்தியின் மார்பகத்தை குறைகூறும் தோழர்கள், அன்னை சோனியாவின் மார்பகத்தில் அமிழ்தம் சுரக்கிறது போன்று பிரச்சாரம் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்களே! என்பதுதான் எம் வருத்தம்.


//அப்படியென்றால் அன்பர்களே, பிரபாகரன் எப்படி அண்ணன் ஆவார் உங்களுக்கு?


பெரியாரை தந்தை என்ற வாயால் தாயென்று யாரை அடையாளம் காட்டுகின்றீர்?


விடுதலைப்புலிகள் இயக்கமா? கூடாது கூடாது.


தடை செய்யப்பட்டே ஆக வேண்டும் என்று எக்காளமிட்டவர் யார்?


தடை செய்யக் காரணம் நான் நான்தான் ஆம் நானேதானென்று தாண்டிக் குதித்தவர் தாயாகி விட்டாரா தங்களுக்கெல்லாம்?



இன எதிரி எப்பொழுது இன்முக அன்னையானார்?//



பெரியார்தான் எம் இனத்தின் தந்தை இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை.செயலலிதாவும் எம் இனத்திற்க்கும் தொடர்பு இல்லைதான். எம் வேண்டா கள்ளத்தொடர்பு ஏற்பட்டபோது கண்டித்திருக்கவல்லவா வேண்டும். அனாதையாகிப்போன தமிழினத்திற்கு அவரின் தமிழீழ கோரிக்கை மற்றும் வாக்குறுதி கொஞ்சம் வியப்பாக அச்சமாக இருந்தாலும், எம் இனத்தின் ஆதரவற்ற நிலை அவரை வரவேற்க செய்திருக்கிறது. ஆசிரியரே இதை வரவேற்றார், ஆனால் கண்டிப்பாக மாறுவார் என்றார். நாங்கள் அவர் மாறினால் தொடர்ந்து போராடும் போர்க்குணம் பெரியாரியல் எங்களுக்கு அளிக்கும் என்ற உறுதியோடு செயல்படுகிறோம் அவ்வளவே...



இத்தாலி சோனியாவை நா கூசாமல் அன்னை என அழைக்க அழுத்தம் கொடுப்பவர்களின் வாயை அவர்களின் பற்களே கடித்து இரத்தம் வடிய செய்திருக்க வேண்டும், ஆனால், அது நிகழவில்லை எங்கள் வாயை மட்டும் குறைகூறி தங்கள் கருணாநிதி என்னும் பிழைப்புவாதிக்கான ஆதரவுக்கு ஆதரவு சேர்க்கின்றனர்.



//சந்தர்ப்ப வேடம்கட்டி சாய்த்திடுவார் சவக்குழிக்குள் சாய்ந்திடப் போகின்றீரா?


ஆரியத்துக்கு வெற்றியா? அய்யா பிறந்த பிறகும்? //

இது ஆரியத்திற்கான வெற்றி போல தோன்றலாம், இன உணர்வு ஆரிய திமிரை வாக்குக்காக நிலை இறங்கி கீழே வரச்செய்து மாற்றியிருப்பது இனஎழுச்சி, அதை நாம் எப்படி மறுப்பது, ஜெயலலிதாவின் இந்த நிலைப்பாடு மாற்றம் ஈழமக்களின் நலனை புறக்கணிப்பவர்களுக்கு சாவு மணி அடிக்க தமிழினம் தயாராகும் முதல் படி.. அடுத்தடுத்த படிகளுக்கு, தமிழினம் முன்னேற வேண்டும் நாம் அதற்கு உழைக்க வேண்டும்.


//அய்யகோ வெட்கம், வெட்கம் ஆழ்மனம் துடிக்கிறதே!


குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுகிறார் ஜெயலலிதா


கேளுங்கள் கேளுங்கள் ஜெயராமன், ஜெயமோகன்


ஜெயலட்சுமி, ஜெகதீசுவரி தப்பித் தவறித் தமிழுண்டா?


பார்ப்பன மொழியைத் தேடித் தேடி கண்டுபிடித்து


சூட்டும் மர்மமென்ன - புரியலியா?


அருந்தமிழ் காக்கும் அங்கயற்கண்ணி ஆகிவிட்டாரா?//



ஜெயலலிதா தமிழ் மொழி காக்கமாட்டார், சரி இது பாப்பத்தியின் அருகில் நின்ற போது தெரிந்திருக்க வேண்டும்தானே. எந்த அடிப்படையில் முன் நாம் அவரிடம் போய் நின்றோம். அடிமட்ட தோழனின் உணர்வுகளை மதித்து நடத்தியிருக்க வேண்டும், கருஞ்சட்டைப்படையை மந்தைக்கூட்டமாக, கருணாநிதிக்கு பின்னால் போகச்சொல்வதில் மட்டும் என்ன பெரியாரியல் உள்ளது...


தமிழ் பெயர் கொண்டதால் மட்டும் தமிழனில்லை என்று ஆகிவிடுமா? மலம் கூட தமிழ்ச்சொல்தான் அதை ஏற்க இயலுமா? தமிழன் பாப்பாத்தியிடம் பெயர் வைத்துக் கொள்ளும் நிலைக்கு, பார்ப்பன தலைமைக்கு வழிவிட செய்த பிழைகள் எத்தனை..... சிந்தித்து பார்க்க வேண்டும் முன்னோடிகள்


தமிழ், தமிழ்என்றே தமிழனை சுரண்டும் கூட்டம் நேர்மையாக நடந்திருந்தால், சரியாக ஆட்சி நடத்தியிருந்தால், மக்களிடம் நேர்மையையும், தியாகமும் கற்பிக்க அடிப்படை கல்வியில் மாற்றம் கண்டிருந்தால், சுயமரியாதை தானாக வந்திருக்கும். அடிமைத்தனைத்தையே கல்வியாய் கற்பித்துவிட்டு, “சுயமரியாதை கொள்என்றால், நம் சகோதரனுக்கு கொல் என்றுதான் கேட்கும், வாக்குக்கு பணம் வாங்கி இனமானம் விற்கத்தான் செய்வான்.


//ஆரியம்வேறு, திராவிடம் வேறு என்று


அய்யாவும் அண்ணாவும் போதித்த உணர்வெல்லாம்


படுகுழியில் போயிற்றா! ஆற்றில் குளிக்கப்போய்


ஆத்தில் குதித்தீரா? தேளைத் தேனென்று சொல்ல


தீர்மானித்தது எப்பொழுது?//


தேளை தேனென்று சொல்ல தீர்மானித்தது எப்போது? அருமையான கேள்வி


தன்னாய்வு செய்து நாம் எப்பொது பெரியாரியல் தொண்டர்களுக்கு அறிமுகம் செய்தோம் என்று கேட்டால் எளிதாக தெரிந்து விடப்போகிறது.


ஈழத்தைப்பற்றி கவலை எப்போது? தேர்தலுக்கு முதல் நாளா?


இத்தனை நாள் கவலைப்பட்ட கருணாநிதி மட்டும் என்ன கிழித்து, ஜெயலலிதா எதிரி, கருணாநிதி துரோகி....முத்துக்குமரனை யாரென்று கேட்டார்(ன்) இளங்கோவன் என்ற வெங்காயம், அதே முத்துக்குமரனை யாரென்று சொல்லவில்லை இந்த மு.க....முத்துக்குமரன் அம்பலபடுத்தியது போதாதென்று நாம் வேறு தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டுமா என்ன?


தமிழகத்தில் எழுந்த மக்கள் எழுச்சியை அடக்கியது, கருணா-காங்கிரசு கும்பலின் அதிகார வர்க்கம்தானே!


மு.க. நடத்திய போராட்டங்கள் மக்கள் எழுச்சியை காயடித்தைதவிர வேறென்ன செய்தது...


மிகசமீபத்திய 6 மணிநேர உண்ணாவிரத நாடகம், அப்பப்பா, தமிழனை இவ்வளவு கேனயனாகவா நினைப்பது? போர் நடந்து கனரக ஆயுதங்களால் மக்கள் தாக்கப்பட்டும், போர் முடிந்து விட்டது, என்று தன் சார்பு ஊடகங்கள் மூலமாக பரப்பி மக்களை மாக்களாக வைத்திருக்க முயற்சி செய்யும் மு.கவை விமர்சிக்க நா ஏன் வருந்துகிறது?


அதற்கு முதல் நாள் வரை...அப்படித்தான் போர் என்றால் சாவார்கள் - சகஜமாம்


கேலி செய்யவில்லையா? தமிழனைக் கொல்லுவது சிங்களவர் நோக்கமல்ல! கூறியது யார்? மறந்து விட்டீரோ? சதிக்குத் துணைபோன லலிதா


சந்திரமதியானது எப்போது?


.................போரென்றால், சாகத்தான் செய்வார்கள்...............


.....மழைநின்ற பின்பு தூவானம் விழுவது போல குண்டடிப்பட்டு சாகத்தான் செய்வார்கள்..................


என்ன திமிர் எவன்/எவள் சொல்லக்கேட்டாலும் உண்மையான இனவுணர்வு கொண்டவனுக்கு செருப்பெடுத்து அடிக்கத்தானே தோன்றும்...இந்த சொற்களை உதிர்த்தது தமிழகக் கொள்ளைக்கூட்டணியான ஜெ-கருணா(நிதி) கூட்டணிதானே.


//இதை அறிவதற்கு பேரறிவு வேண்டாம்!


சிற்றறிவும் போதுமே ஒரு சொடுக்கில் அறியலாமே!


சந்தர்ப்பவாதம் தானாம்! ஆனாலும் சந்திப் பிழையில்லாமல்


சரணமடையத் தயார்தானாம்! தமிழன் விழுந்த இடத்திலேயே


விழுந்து கொண்டா இருக்க வேண்டும்?//



அறிவு பற்றியெல்லாம் பேசும் நிலையிலா நம் இனத்தை, தாய் தமிழகத்தை வைத்திருக்கிறது? இந்த ஜெ-கருணா கூட்டணி...


5 வருடம் நீ, 5 வருடம் நான் என்று கொள்ளையடிக்கும் கூட்டம், மக்கள் போராட்டத்தை ஒடுக்கவதில் மட்டும் கூட்டு வைத்திருக்கிறது. ஆதிக்க ஆளும் வர்க்கம், இவர்களில் பாப்பாத்தி கூட சேருபவன் மட்டும் சந்தர்ப்பவாதி, கருணா கூட சேருபவன் கொள்கை யோக்கியன் என்று சொன்னால், எப்படி எந்த புரத்தில் நம்புவது....


தமிழன் விழுந்த இடத்திலேயே விழுவதற்கு காரணம், அவன் கால்களை வாறுவதில் இந்த ஓட்டுபொறுக்கி நாய்களோடு சேர்ந்து முற்போக்குவாதிகள் என்னும் போர்வையில் போலி கம்யுனிஸ்டுகள் போல எம் மக்களின் கால்களை இழுப்பதுதானே காரணம்...

//விடிவுதான் எப்பொழுது? விபீஷணர்க்கு முடிவேது?


ஆரியம் நடமாடும் நாசம் வேண்டாமப்பா பாசம்


கெடுத்திடுமே அந்தக் காசம்! கீர்த்திமிகு அண்ணா


ஆரிய மாயையில் தீட்டிய தூரிகைச் சித்திரமிது!


மறந்தீரா மறத்தமிழரே? மயக்கத்தில்தான் வீழ்ந்தீரா?


சிரிப்பிலே சொக்காதே சிலந்திமொழி அது வென்ற


சொக்கத் தமிழிலே சொன்னாரே மேலும் அண்ணா!//


திராவிடம் பேசியவர்கள் இன்று இந்திய தேசியம் பேசிச் செய்யும் பித்தலாட்டங்களை நம்பி நாங்கள் எப்படி எங்களை ஒப்புக் கொடுப்பது, பெரியாரியலை விழுங்கி நிர்வாண நடனமாடும் திராவிட பேய்கள், பெரியாரை மறக்கடிக்க செய்யும் பித்தலாட்டம் கொஞ்சமா.....


அண்ணா பெரியாருக்கு அருகிலிருந்து துரோகம் செய்தார், கருணாநிதி பெரியார் திடலுக்கு அருகில் நின்று பெரியாரியலுக்கும் தமிழினத்திற்கு துரோகம் செய்கிறார்..இவர் நோக்கம் பெரியாரியலை பரப்புவது அல்ல, பெரியாரியலை விழுங்குவது என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்.


//பகையாளிக்கும் தோழனுக்குமுள்ள


பாகுபாட்டை அறியாத கூழ்முட்டைகளா நீங்கள்?


குடிப்பெயரைக் கெடுக்கலாமா?


வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் வேறுபாட்டை அறியாத விடலைகளா நீங்கள்


பகுத்தறிவுப் பாடம் போதித்த பகவலன் பெரியார் சகாப்தத்திலும்


சோரம் போக சோற்றாலடித்த பிண்டமா தமிழன்தான்?//


பகையாளிக்கும் துரோகிக்கும் உள்ள வேறுபாட்டை கேட்டீர்களானால், ஜெயலலிதா-எதிரி, கருணாநிதி- துரோகி என்று இலகுவாக கூறிவிடலாம். இந்த போலி மக்களாட்சியில் எந்த அரசியல்வாதியை நண்பன் என்று அழைக்கிறீர். மன்னிக்கவும், யாருக்கும் நண்பன் என்று அழைக்கிறீர்.


ஏன் மீண்டும் மீண்டும் பெரியாரையும் கருணாநிதியை இணைக்கிறீர்கள்.


பெரியார் பகுத்தறிவு பகலவன் என்றால் பகலவனின் ஒளி வாங்கி மற்றவர்களுக்கு அளிக்கும் நிலாவாக கூட கொள்கை ரீதியாக இருக்க முடியாதவர் அவர். மொன்னை நாத்திகம் யார் வேண்டுமானாலும் பேசலாம், சமூக அக்கறையில்லாத நாத்திகம் பயனற்றது (நன்றி:எழுத்தாளர் பாமரன்). இவர் ஆக்டோபஸ் போன்று முற்போக்காளர்களை விழுங்க பயன்படுத்தும் ஆயுதம் நாத்திகம் அவ்வளவே.


சாதி அரசியலை வலுப்படுத்திய இந்த அரசியல்வாதிக்கு வக்காலத்து வாங்க பெரியாரை துணைக்கு அழைப்பது பெருங்குற்றம் ஐயா!


//கிளிப்பிள்ளைக்குப் பாடம் போல் கற்பித்தாரே கறுஞ்சட்டைத் தந்தை


காற்றோடு போய்விட்டதா கண் மூடிப் போனதேன்?


சிந்திப்புச் சீப்பினை எங்கே ஒளித்து வைத்தீர்?//


மீண்டும் மீண்டும் கொஞ்சம் அலுப்புதான் தட்டுகிறது. பெரியார் கற்பித்ததை பற்றி மற்றவர்களிடம் கேட்கும் நீங்கள் முந்தானைக்குள் பெரியாரியல் தேடிய காலத்தால், களத்தில் உள்ள தோழர்கள் உணரும் நெருடல், இன்னும் கேட்கும், சந்திக்கும் விமர்சனங்கள்... கிளிப்பிள்ளைக்குப் பாடம் போல் கற்பித்தாரே கறுஞ்சட்டைத் தந்தை காற்றோடு போய்விட்டதா கண் மூடிப் போனதேன்?

//இன்னும் ஒரு பெரியார் வந்து இடித்துச் சொல்ல வேண்டுமா?


இன்னும் ஒரு அண்ணா தோன்றி ஏளனம் செய்ய வேண்டுமா?


இன்னும் ஒரு புரட்சிக்கவி பிறந்து சூட்டுக்கோல் போட வேண்டுமா?//


பெரியார் இருந்திருந்தால் தமிழை சொல்லி தமிழனை ஏமாற்றிய கயவர்களை அம்பலப்படுத்தியிருப்பார். திராவிடத்தை முன்னேற்றிய கதையை கிழிந்தெறிப்பார்.என்று கற்பனைக்குள் வாழ வேண்டிய சூழல் எங்களுக்கு. பெரியாரின் நூல்களுக்கு உரிமைக் கொண்டாடும் அன்பர்கள், பெரியாரின் சிலையை சேதப்படுத்திய கயவர்களை எத்தனை முறை கைது செய்ய வலியுறுத்தினீர்கள், எத்தனை முறை எத்தனை முறை கைது செய்தார் இந்த பெரியாரின் தொண்டர். சேதப்படுத்தியதே இந்த மு. க வின் திமுகவினர்தானே.


இன்றிருந்தால் இந்த கயவர்களை கண்டு மீண்டும் அந்த புரட்சி பாவலன், முத்துக்குமரனின் இறுதி நிகழ்வில், தமிழர்களை நோக்கி பாடியிருப்பான்..


கொலை வாளினை எடடா...என்றே முழங்கியிருப்பான, இன உணர்வை ஊட்டியிருப்பான்.


///தமிழன் கண்ட கால்வாயை ராமன் பெயரைச் சொல்லி தடுத்த பிறகும்..


தமிழன் தோல் கடித்துக் கிடக்க வேண்டுமோ! தீ பரவட்டும் என்றாரே அண்ணா


எதன்மீது? அந்த ராமன்மீது தானே? அந்த ராமனைத் தூக்கி வந்து


தமிழன்மீது மொத்தியபிறகும் சொரணை வரவில்லையா!////


சுப்பிரமணியசாமியை மொத்தி எடுத்தபோது வந்த கோபம், இராமனின் விமர்சனத்திற்கு வந்த வடவர் எதிர்ப்பு கண்டதும் அடங்கிப்போனதே!


ஈழமக்களுக்கு போராடிய வழக்குறைஞர்களை மொத்தி எடுக்க முனைந்த தடி பெரியாரின் தடியாக இருக்க முடியுமா! தடி பிடிக்கும் வயதில் இருக்கை(சீட்) பிடிக்க திரியும் இனமானம் விற்ற கயவர்களின் கையில் பெரியாரின் அரிச்சுவடி கூட இருந்திருக்குமா?


இராமன் பெயரிலாவது திட்டத்தை நிறைவேற்றுங்கள்,என் குடும்பம் கொள்ளையடிக்க வேண்டும் என்று இரைஞ்சும் நிலை பெரியாரியலின் போர்க்குணத்திற்கு நேர்ந்த அவலமன்றி வேறென்ன..


//தன்மானம் போனதெங்கே? தமிழருக்கான திட்டத்தினை ரத்து செய்வேன் என்று


அறிக்கை கொடுத்து அதே தமிழர்களிடம் வாக்குக் கேட்டு வரத்தைரியம்


கொடுத்தோர் யார்? நீங்கள் கொடுத்த தைரியம் நீட்டி முழங்குகின்றார்


சுக்கரீவர்கள் சிரஞ்சீவிகளா? அனுமார்கள் ஆயுள் நீடிப்பா?//


தன்மானம் விற்று சோனியா காலில் விழுந்துகிடப்பதுதான் தன்மானம் இனமானம் என்கின்றாரோ என்னவோ! தமிழர்களிடம் வாக்கு கேட்டுவரும் பார்ப்பன பாசிச பேய் தமிழன் கால்வாய் திட்டத்தை ரத்து செய்வேன் என்கின்ற பொழுது துள்ளும் மான் குஞ்சுகளுக்கு, ரத்து செய்வேன் என்று சொன்னதற்கு தமிழன் கிளர்தெழுந்திருக்க வேண்டும்..


ஆனால், தமிழனால் முடியாது, அவனை மானங்கெட்டவனாக உருவாக்கி வைத்திருக்கிறது இந்த அமைப்பு, சுயநலவாதியாக மாற்றி வைத்திருக்கிறது இந்த நுகர்வு கலாச்சாரம், கல்வி அமைப்பு. என்ன தொலைநோக்கு பார்வையோடு இந்த அதிகார வர்க்கம் மக்கள்நலனோடு சிந்தித்தது? நாம் என்ன வலியிருத்தி சாதித்தோம். நாம் இந்த 5 ஆண்டுகள் என்ன செய்தோம்.


///மோடியை அழைத்து வந்து மூச்சுமூட்ட விருந்து படைத்தாரே


முகவரியைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? மோசம் போவது என்று முடிவா?


பாப்பாத்தி நானென்று சட்டப் பேரவையிலே சதுராடிக் காட்டியவர்


தாயாகி விட்டாரா? தலைப்பெழுத்தே மாறியதா தமிழனுக்கு?


அதே சட்டப் பேரவையிலே இது சூத்திரர்களின் அரசென்று


பிரகடனம் செய்தாரே அவர் உங்கள் அகராதியில் துரோகியா?////


இதுநாள் வரை போதாது, இன்னும் சூத்திரனாக பார்ப்பன, பனியா கும்பலுக்கு தாசி மகனாக இருக்கச் செய்வதற்குதானே சோனியா கும்பலோடு கூட்டணி..


இதை சட்டபேரவையில் பிரகடனம் செய்து வேறு அறிவிக்க வேண்டுமா?

மோடி எதிர்க்கும் நாம் வாஜ்பாய் கும்பலையும் எதிர்க்கிறோம். ஆனால், வாஜ்பாயுடன் தேனிலவு கொண்டாடிவிட்டு இப்பொழுது மதவாதம், மதவாதம்என்று கூக்குரலிடும் இந்த கயவர்கள் துரோகிகளல்லாமல் வேறு யார்?


மீண்டும் சொல்கிறோம்...


ஜெயலலிதா எதிரி? கருணாநிதி துரோகி?


//மீண்டும் மனுதர்மமா? நீங்கள் கொடியா, கயிறா?


பழி சுமக்காதீர்கள் பரிகசிக்கப்படுவீர்கள்


தவறு செய்யாதீர்கள் தரமிழந்து போவீர்கள்!//


செந்தட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவனுக்கு எதிராக வன்கொடுமை, ஆதிக்க சாதி இந்துக்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. மனுதர்மம் ஏதோ ஜெயலலிதாவின் கைகளில் மட்டும்தான் இருக்கின்றது போலவும் கருணாநிதியின் முழுநேர மனுஎதிரி போல சித்தரிப்பதும் எதற்கு?


உத்தபுரத்தில் சாதி இந்துக்களிடம் மென்மையான அணுகுமுறையை கையாண்டதன் பெயரென்ன, மனுதர்மத்தின் நவீன வடிவமல்லாமல் வேறென்ன?


தீண்டாமை சுவற்றை முழுமையாக நீக்காமல் ஓட்டுக்கு, ஆதிக்க சக்திகளிடம் மண்டியிட்ட தத்துவத்தின் பெயர் மனுதர்மமா? பெரியாரியலா?


பார்ப்பானுக்கு மென்மையான தண்டனை கொடுப்பது, அதாவது அடித்தாலும் வலிக்கக்கூடாது....என்பது இது மனுதர்மம்தான் என்று என் சிற்றறிவு கூறுகிறது உங்களுக்கு எப்படியோ!


//பெரியார் வெறும் உச்சாடனமல்ல!


அது ஒரு நுண்ணாடி! நுணுகிப் பாருங்கள்


ஆரியக் கிருமிகளின் அசைவுகள் தெரியும்


படம் எடுக்கும் பாம்புகூட அழகு அழகுதான்!


பாஷாணம் அதன் பல்லில்! பகுத்தறிவு இப்போது


பயன்படவில்லையென்றால் வேறு எப்போது?


ஆட்டம் முடிந்த பிறகா? அப்போதும்கூட


கருமாதிக்கும் வருவான் - மீதி மிச்சத்தைச்


சுரண்டிப் போக! எச்சரிக்கை! எச்சரிக்கை!///


பெரியார் உச்சாடனமல்ல, ஆனால், அப்படித்தான் ஆக்கிவிட்டனர் இந்த ஆளும் வர்க்கத்தினர். பெரியாரின் கொளகையை சொல்லி கருணாநிதி ஓட்டுக் கேட்கட்டுமே பார்க்கலாம்..முடியாது என்பதல்ல இதன் பதில். கருணாநிதி கூட்டம் விரும்பாது என்பதுதான் அது. கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு போன்றவைகளை வெற்று தாளில் பதித்து விட்டு, கோயிலுக்கு கும்பாபிசேகம், ஆதிக்க சாதியின் நாயனின் பெயரை விமானநிலையத்துக்கு சூட்டுவது என பார்ப்பனீயத்திற்கு நவீன வடிவம் கருணாநிதி, பழைய வடிவம் ஜெயலலிதா....


ஜெயா-கருணா மற்றும் ஜால்ரா கூட்டுக்களவானிகளை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி, மக்களோடு புரட்சிகர அமைப்புகள் அருகிச் செல்வதே, நம்முடைய அவலநிலையை களையும் வழி.


இந்த தேர்தலில் காங்கிரசு தோற்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் தோழர்கள், நெடிய பயணம் காத்திருக்கிறதுஎன்பதை உணர வேண்டும் ஒரு அமைப்பு சார்ந்திருக்கின்ற காரணத்தினாலேயே, லாலி பாடுவதை நிறுத்த வேண்டும், சுய சிந்தனை தெளிவு வேண்டும். தவறென்றால் திருத்தம் செய்ய தயங்கக்கூடாது,


--------------------இது எனக்கும் பொருந்தும்--------------------------


பார்ப்பனீய, பனியா கும்பல் நம் முதுகில் ஏறி மிதித்து நம்மை அடிமையாக்கி வைத்திருக்கிறது, மேலும் அடிமையாக்க முனையும் எவனாயிருந்தாலும் நம் இனத்தின் விடுதலைக்கான எதிரி, நமக்கு காலம் கனிந்து கொண்டு வளர்கிறது, நாம் நம் மொத்த இனத்தின் விடுதலைக்கு போராட தயாராக வேண்டும்.....


மீண்டும் சந்திப்போம்.

3 கருத்துகள்:

களப்பிரர் - jp சொன்னது…

சாட்டை அடி விளக்கங்கள். பாராட்டுக்கள். எல்லோரும் படித்து அறிவு பெறவேண்டிய - ஆழமாக உணர்ந்து எழுதப்பட்ட பதிவு . மிக்க நன்றி

முனிசாமி. மு சொன்னது…

உண்மை நிலையை உணர்வுடன் கூறியுள்ளீர்கள் ....

பெயரில்லா சொன்னது…

உண்மைகள் ஒருபோதும் உறங்காது!