திங்கள், 2 ஜூன், 2014

பிச்சையிடப்பட்டதல்ல தலித் மக்களின் உரிமை!

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கள்ளர்கள் 1930 டிசம்பரில் தீண்டப்படாதவர்களுக்கு எட்டுத் தடைகளை விதித்தனர். இந்தத் தடைகள் மீறப்பட்டதால் தீண்டப்படாதவர்களுக்கு எதிராக கள்ளர்கள் கடும் வன்முறையைப் பயன்படுத்தினர். தீண்டப்படாதவர்களின் குடிசைகள் தீவைத்து சுட்டெரிக்கப்பட்டன; அவர்களுடைய களஞ்சியங்களும் சொத்துக்களும் நாசமாக்கப்பட்டன; அவர்களது கால்நடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கள்ளர்கள் தீண்டப்படாதவர்களுக்கு விதித்த தடைகள் வருமாறு:
  1. ஆதி-திராவிடர்கள் தங்க நகைகளையோ வெள்ளி நகைகளையோ அணியக் கூடாது.
  2. ஆண்கள் முழங்காலுக்குக் கீழேயோ, இடுப்புக்கு மேலேயோ எந்த ஆடைகளையும் அணியக் கூடாது.
  3. ஆண்கள் கோட்டுகளையோ, சட்டைகளைய, பனியன்களையோ உடுத்தக் கூடாது.
  4. எந்த ஆதி-திராவிடரும் சிகை அலங்காரம் செய்துக் கொள்ளக் கூடாது.
  5. ஆதி-திராவிடர்கள் தங்கள் வீடுகளில் மண்பாண்டங்கள் தவிர வேறு எந்தப் பாத்திரங்களையும் பயன்படுத்தக் கூடாது.
  6. பெண்கள் ரவிக்கைகளோ, தாவணிகளோ அணிந்து தங்கள் உடலின் மேற்பகுதியை மூடிக்கொள்ளக் கூடாது.
  7. பெண்கள் தலையில் பூ வைத்துக் கொள்ளக் கூடாது; நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக் கொள்ளக்கூடாது.
  8. ஆண்கள் வெயிலுக்கோ, மழைக்கோ குடைகளைப் பயன்படுத்தக் கூடாது; கால்களில் செருப்புகள் அணியக் கூடாது.
இந்த எட்டுத் தடைகளும் திருப்திகரமாக நிறைவேற்றப்படாததால் 1931 ஜூனில் கள்ளர்கள் ஒன்றுகூடி மேலும் பதினோரு தடைகளை விதித்தனர். இந்தக் தடைகளை அவர்கள் செயல்படுத்த முற்பட்டபோது வன்முறை முன்னிலும் கொடிய முறையில் தலைவிரித்துத் தாண்டவமாடிற்று. இப்போது கள்ளர்கள் விதித்த பதினோரு தடைகள் வருமாறு:
  1. ஆதிதிராவிடர்களும் தேவேந்திர குல வேளாளர்களும் முழங்கால்களுக்குக் கீழ் வேஷ்டி கட்டக்கூடாது.
  2. மேலே கண்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த ஆடவரும், பெண்டிரும் தங்க நகைகளை அணியக் கூடாது.
  3. பெண்கள் மண்குடங்களில்தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும்; பித்தளை அல்லது வெண்கலப் பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து வரக்கூடாது. தண்ணீர்க் குடங்களைத் தலையில் வைத்து சுமந்து வருவதற்கு அவர்கள் வைக்கோல் சும்மாடைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, துணி சும்மாடைப் பயன்படுத்தக் கூடாது.
  4. அவர்களுடைய குழந்தைகள் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளக்கூடாது.
  5. குழந்தைகளை மிராசுதாரர்களின் கால்நடைகளை மேய்க்கும்படி கூற வேண்டும்.
  6. ஆண்களும், பெண்களும் மிராசுதாரர்களின் பண்ணைகளில் அடிமைகளாக வேலை செய்ய வேண்டும்.
  7. அவர்கள் மிராசுதாரர்களுக்கு வாரத்துக்கோ, குத்தகைக்கோ நிலத்தை சாகுபடி செய்யக்கூடாது.
  8. அவர்கள் தங்கள் சொந்த நிலங்களை மிராசுதாரர்களுக்குக் குறைந்த விலைக்கு விற்று விட வேண்டும்; அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களது நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட மாட்டாது. மழை பெய்து ஏதோ சிறிது விளைந்திருந்தாலும் அது இரவோடு, இரவாக களவாடப்படும்.
  9. அவர்கள் மிராசுதாரர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்ய வேண்டும்; ஆண்களுக்கு 4 அணாவும், பெண்களுக்கு 2 அணாவும் கூலியாகத் தரப்படும்.
  10. மேலே கூறிய வகுப்பினர் தங்கள் வீட்டுத் திருமணங்களின் போதோ, வேறு விசேஷங்களின் போதோ மேளவாத்தியத்தை பயன்படுத்தக் கூடாது.
  11. திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முன்னர் குதிரை மீது ஊர்வலம் வருவதை அவர்கள் நிறுத்த வேண்டும்; கல்யாண ஊர்வலங்களுக்கு தங்கள் வீட்டு கதவுகளையே பல்லக்குகளாக பயன்படுத்த வேண்டும்; எந்த காரியத்துக்கும் வாகனங்களை உபயோகிக்கக் கூடாது. ( அண்ணல் அம்பேத்கர் தொகுதி 10, பக்கம் 238-240)
மனு எங்கே நடைமுறையில் உள்ளது? இந்து மதத்தை மனுவை வைத்து மதிப்பிடக் கூடாது என்று முட்டுக் கொடுக்கும் இந்துத்வாதிகள். என்ன பதில் சொல்வார்கள் கள்ளர்கள் இந்துக்கள் இல்லையென்றா? அவர்கள் பார்ப்பனியத்திற்கு எதிரானவர்கள் என்றா?
ambமேற்கண்ட கொடுமைகளை சில கள்ளர்கள், அதுவும் வளம் படைத்த நிலச்சுவந்தார்கள்தான் முன்னின்று இதை நடைமுறைப்படுத்தினார்கள் என்று உழைக்கும் ஏழை கள்ளர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு கூறி சாதிவெறியை நியாயப்படுத்தலாம். நானும் அந்த ஏழை உழைக்கும் கள்ளர்கள்தான் குற்றவாளிகள் என்று சொல்லவில்லை. மேல்மட்டத்தில் இருக்கும் வளம் படைத்தவர்கள் செய்யும் வன்கொடுமைகள், சாதிவெறி கொண்டு செய்யும் திமிர்த்தனங்களை சகித்துக் கொண்டிருப்பதோடு, அதை எதிர்த்துக் கேள்வி கேட்காமல், ஏதோ ஒரு வகையில் ‘ஆழமனதை’( நீயா நானா Effect) திருப்திப்படுத்திக் கொள்வதோடு, தன்னை மேலானவர் என்ற அங்கீகாரம் தருகின்றது என்ற அந்த வளம் படைத்தவர்களின் மேலாதிக்கம் நீடிக்கும்படிக்கு சாதி கட்டமைப்புக்கு காவலாக நிற்கும் காவல்காரர்களாக கள்ளர்களை போன்றே பிற உழைக்கும் சாதி இந்துக்கள் நிற்கின்றார்கள் என்ற உண்மைதான் சுடுகின்றது .
வளம் படைத்த அயோக்கியவர்கள் தீண்டப்படாத மக்களை மட்டுமல்ல, தம் சொந்த சாதி உழைக்கும் மக்களையும் சுரண்டுகிறார்கள். அந்த சுரண்டலை எதிர்த்து போராடுவதற்கு, தீண்டப்படாத சாதிகளின் உழைக்கும் மக்களோடு இணைந்து போராட வேண்டுமென்ற விழிப்புணர்வு இல்லாமல் தேங்கி நிற்கின்றார்கள். தங்கள் தேக்கத்தை இயலாமையை சாதி மேலாதிக்கம் தரும் போதையில் மீசையை தடவிக் கொண்டே குப்புற விழுந்து கிடக்கின்றார்கள்.
மேற்கண்ட விசயங்களெல்லாம் இன்று மாறிவிட்டதே, இப்பொழுது ஏன் இதைபற்றியெல்லாம் பேசுகின்றீர்கள்? உங்களுக்கு மக்கள் பிளவுண்டு கிடக்க வேண்டுமென்ற ஆவலால்தான் இப்படியெல்லாம் பேசுகின்றீர்கள். தமிழ்த்தேசிய இனமென்று பெருமை கொண்ட இனத்திற்குள் பிளவு ஏற்படுத்த முயல்கிறீர்கள். அம்பேத்கர் வடநாட்டுக்காரர், இந்தியை ஆதரித்தாரென்று என்று அவசர, அவசரமாக உள்ளூர இருக்கும் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு போகின்றார்கள்.
மாற்றம் என்பது சாதி இந்துக்களின் அப்பனாத்தாவோ, பாட்டன் – பாட்டியோ மனமிறங்கி பெரும் இழிவுக்கு உள்ளான மக்களுக்கு பிச்சையிட்டதில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த மாற்றங்களுக்கு காரணம் அந்த மக்களின் போராட்டங்கள்தான் காரணம். அதற்கு சில பொதுவுடமை இயக்கங்களோ, பெரியாரிய இயக்கங்களோ, தலித் அமைப்புகளோ உரிமைகள் கோரலாம். இவற்றில் தலித் மக்களின் போராட்டமும் முதன்மையான காரணம். அதேவேளையில், தங்களுடைய சாதி சட்டகத்தை களைந்துவிட்டு தலித் மக்களோடு கைகோர்த்து போராடிய தலித் அல்லாத தோழர்களின் பங்கும் மறுக்கத்தக்கதல்ல.
ஆனால், அந்த போராட்டங்கள் முழு எல்லையை தொடுவதற்கான வேலைகள் இன்னும் மீதமிருப்பதால் சாதியம் பழைய கடுமையை கொஞ்சம் தளர்த்திக் கொண்டு, நவீன தொழில்நுட்பங்கள் துணையோடு பல்வேறு தீண்டாமை வடிவங்களை இன்னும் நடைமுறைப்படுத்தத்தான் செய்கின்றன. நாம் இப்படி பேசிட்டிருந்தா ஒரு டீம் வந்து தலித் மக்கள் நடுவில் தீண்டாமையில்லையா? சாதி வேறுபாடுகள் இல்லையா? என்று எதிர்கேள்வி கேட்கலாம்.
அதற்கு நம் மொழியில் பதில் சொல்வதற்கு முன் அண்ணல் அம்பேத்கரின் வரிகளை அவர்களுக்கு நினைவுப்படுத்துவோம்.
“சாதிமுறை முக்கியமாக, இந்துக்களின் மூச்சுக்காற்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்துக்கள் அந்த மூச்சுக்காற்றால் சுற்றிலும் உள்ள காற்று முழுவதையும் கெடுத்துவிட்டார்கள். அதன் மூலம் சீக்கியர், முஸ்லீம், கிறிஸ்துவர் உள்ளிட்ட அனைவரும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.” (தொகுதி 1, பக்கம் 118)
வேற்று மதத்தினருக்கும் தங்கள் மதத்தினருக்கு பிடித்திருக்கும் நோயை கடத்திக் கொண்டு போகும் ஆற்றலை பெற்ற பார்ப்பனிய இந்து மதம் தலித் மக்கள் நடுவில் சாதி என்னும் தொற்று நோயை பரப்புவது கடினமான காரியமா என்ன? எப்படி பிறசாதி உழைக்கும் மக்கள் தாங்கள் பின்பற்றும் சாதியம் தங்கள் சுதந்திரத்திற்கும் எதிரானது என்பதை உணராது சாதியத்திற்கு காவல் காக்கின்றார்களோ, அதுபோல தங்களது முதல் எதிரியான சாதியத்திற்கு விழிப்புணர்வு பெறாத தலித் மக்கள் தங்களுக்குள் இருக்கும் உட்சாதிகளிடையே சாதிய பிளவுகளை பிறாண்டி பார்க்கின்றார்கள்.
ஆனால், ஒன்று இங்கே கவனிக்கத்தக்கது எப்படி இஸ்லாமியர்களையோ, கிருத்துவர்களையோ சாதி இந்துக்கள் எதிர்க்கின்றார்களோ அதேபோலவே, தம்மை போலவே இந்து பண்பாட்டை பின்பற்றினாலும் தலித் மக்களை வெறுக்கும் வாய்ப்பை சாதி இந்துக்கள் தவற விடுவதேயில்லை.
இதெல்லாம் நல்ல வக்கனையா பேசுறீங்க. எதுக்குய்யா இட ஒதுக்கீடு கேக்குறீங்க என்று பழைய மொன்னையான கேள்வியை இன்னும் முன்வைத்து தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு எதிரான தங்கள் ஆழ்மனதுக்கு ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள் ஆதிக்கசாதிகள். ஆனால், இட ஒதுக்கீடு சாதி வளர்க்கின்றது என்பது சுத்த பேத்தலான வாதமென்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்பதற்காக, மீண்டும் ஒருமுறை இந்த கேள்விக்கு விரிவாக பதிலளிக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அதற்கு முதலில் இட ஒதுக்கீட்டால் தலித் மக்கள்தான் அதிகம் பலனடைந்தார்கள் என்று உளறிக் கொண்டு திரியும் அறிவுஜீவிகள்(?), தலித் மக்கள் இந்த சுதந்திர இந்தியாவில் சாதி இந்துக்களை விட கூடுதலாக அடைந்த பலன்கள் என்னென்ன என்பதை பட்டியலிடுங்கள். அதோடு, இட ஒதுக்கீட்டல் சாதி இந்துக்கள் பெற்ற பலன்கள் தலித் மக்களைவிட குறைவானவை என்பதை தரவுகளோடு உணர்த்துங்கள். அதுவரை, உங்கள் பல்லிடுக்கின் நடுவில் இருக்கும் தலித் வெறுப்பு என்னும் சாதிவெறி நஞ்சை ஒடுக்கப்பட்டு மக்கள் எளிதில் கண்டுகொள்வார்கள் என்ற எச்சரிக்கை உணர்வோடு காவி கோவணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை: