வெள்ளி, 11 செப்டம்பர், 2009

அருந்ததியர் இனத்தில் பிறந்தது பாவமா?-பட்டதாரி வாலிபரின் பரிதாப நிலை

சாதி ஒழிக்கப்படும் வரை............தாழ்த்தப்ப்ட்ட தமிழ்ச் சகோதரர்கள் இப்படித்தான் பாதிக்கப்படுவார்கள்

மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமம் வடிவேல்கரை. இந்த பஞ்சாயத்துக்குத்தான் மத்திய அரசு சமீபத்தில் நிர்மல் புரஸ்கார்விருது வழங்கியிருக்கிறது. அந்த விருது கிடைக்கக் காரணமாக இருந்தவர் அம்மாசி. இவர்தான் அந்த ஊருக்குத் துப்புரவுப் பணியாளர். குப்பைகளை இவர் கூட்டி, பெருக்கியதால் சுத்தமான கிராமம் என்ற பெருமை கிடைத்தது. அதற்கு நிர்மல் புரஸ்கார் விருதும் கிடைத்தது.

வடிவேல்கரையில் பிள்ளைமார், கள்ளர் சமூகத்தினர்தான் அதிகம். அங்கு அருந்ததியர் இன மக்கள் எழுபத்தைந்து குடும்பங்கள்தான் வசிக்கின்றன. அருந்ததியர் மக்களில் யாரும் படிக்காத நிலையில் தப்பித் தவறி துப்புரவுப் பணியாளரான அம்மாசி, தன் மகன் முருகனை லிட்டில் டிரஸ்ட் உதவியோடு எம்.காம். படிக்க வைத்தார். தற்போது தனியார் கல்லூரியில் பி.எட். படித்துக்கொண்டிருக்கும் முருகன்தான் இப்போது இந்தக் கிராமத்தின் ஹாட்டான டாபிக். முருகனை படிக்க விடக் கூடாது என்று ஊரே கூடி, அவரது படிப்புக்கு மூடு விழா காண திட்டமிட்டிருக்கிறது என்று மற்ற சாதி மக்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் அருந்ததியர் இன மக்கள். இந்த நிலையில் முருகன் தாக்குதலுக்கு உள்ளானார் என்ற செய்தியும் கிடைத்தது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தலையில் பதிமூன்று தையல்களோடு தரையில் படுத்திருந்த முருகனை சந்திக்க முடிந்தது. ஆறுதல் கூறிவிட்டு பேசத்தொடங்கினோம். ஈனஸ்வரத்தில் முருகனின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.

ஊர்ல எங்க அருந்ததியர் சமூகத்தில் நான் மட்டும்தான் எம்.காம். படித்து முடித்து, பி.எட். படிச்சுக்கிட்டு இருக்கேன். நான் ப்ளஸ் டூ படிக்கும் போதே முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ராமநாதன், ‘உனக்கு வேலை போட்டு தர்றேன் படிப்பை நிறுத்திருன்னு சொன்னாரு. நான் கேட்கலை. காலையில வீடு வீடா நியூஸ் பேப்பர் போடுவேன். அதுக்கப்புறம்தான் காலேஜுக்குப் போவேன். இரவு எங்க பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பேன். இதுதான் மற்ற சாதிக்காரர்களுக்குப் பிடிக்கலை.

நாங்க, எங்க காலனி வீட்டுக்குப் போகணும்னா ஒண்ணு கம்மாய்கரை வழியா வரணும். இல்லாட்டி ஊர் மந்தை வழியா வரணும். இப்ப ரிங்ரோடு போடுறதுனால கண்மாய்க் கரை வழி அடைபட்டுப் போச்சு. ஊர் மந்தை வழியாத்தான் வரணும். அப்படித்தான் நான், ஆகஸ்ட் 13-ம் தேதியன்னிக்கு எங்க வீட்டுக்கு மந்தை வழியா சைக்கிள்ல போனேன். மந்தையில் கூடி நின்ற மற்ற சாதிப் பசங்க என்னை வழிமறிச்சு, ‘உனக்கு எத்தனை தடவை சொல்லுறதுடா. இறங்கி உருட்டிக்கிட்டு போனு சொல்லி, தள்ளி விட்டதோட, ‘படிச்சத் திமிறான்னு சொல்லிகடக்கால் கட்டுறதுக்குப் பயன்படும் கட்டுக்கல்லை தூக்கி ஆனந்த்ங்கிற பையன் என் தலையில போட்டுட்டான்.

மண்டை உடைஞ்சு ரத்தம் ஆறு மாதிரி ஓடுது. ஊரே நின்னு வேடிக்கை பாத்துச்சு. என்னன்னு கேட்க நாதியில்ல. ரத்தம் வழிஞ்சி ஓடுறதைப் பார்த்து பயந்துபோன ஆனந்த், சிலம்பரசன், லட்சுமணன் மூணு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாங்க. நானும் எங்க அப்பாவும் அடிச்சோம்னு சொல்லி அவனுங்களே ரத்த காயத்தை ஏற்படுத்திக்கிட்டு போய் புகார் கொடுத்தாங்க. சம்பவம் நடந்து நான்கு மணி நேரம் கழிச்சுத்தான் எனக்கே சுயநினைவு வந்தது. அதன் பிறகுதான் போலீஸ்ல புகார் கொடுத்தேன்.

நாகமலை புதுக்கோட்டை போலீஸ் என் மேலேயும் எங்க அப்பா மேலேயும் கொலை முயற்சி வழக்கு பதிவு பண்ணிட்டதாச் சொல்றாங்க. என்னையும் அப்பாவையும் கைது பண்ணச் சொல்லி சில அரசியல் கட்சிகள் பிரஷர் கொடுக்கறதாவும் சொல்றாங்க.

சுதந்திர இந்தியாவில் நான் தலித் என்பதற்காக கஷ்டங்களை அனுபவிக்கிறேன். எப்படியாவது என்னை படிக்க விடக்கூடாது என்பது தான் அந்த மக்களோட எண்ணம். நான் டியூஷன் எடுத்து எங்க காலனியில் இப்பத்தான் அஞ்சு பேர் பத்தாவது படிக்கிறாங்க. நாங்க இன்னமும் செருப்புப் போட்டுக்கிட்டு ஊருக்குள்ள போகக் கூடாது. சைக்கிள் ஓட்டிக்கிட்டு போகக் கூடாது. டீக்கடையில் இரட்டை டம்ளர் இருக்கு. தமிழ்நாட்டில் சாதி என்ற ஆயுதத்தால், தமிழனுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டால், மற்ற நாடுகளில் மட்டும் தமிழனுக்கு உரிமை வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்?” என்று அழுதுகொண்டே கேட்டார் முருகன். முருகனின் அருகில் இருந்த பாண்டி ரொம்பவே ஆவேசப்பட்டார். முருகனை அடிச்ச அடுத்த நாள் காலையில் 8.10 மணிக்கு பஸ் வந்தது. அதுலதான் வேலைக்குப் போறவுங்க, பள்ளிக்கூடம் போறவுங்க எல்லாம் போவோம். எங்க மக்கள் எல்லாத்தையும் கீழே இறக்கி விட்டுட்டு மற்ற சாதிக்காரங்க மட்டும் பஸ்ல போனாங்க. நாங்க மூணு கிலோமீட்டர் நடந்து போயி நாகமலை புதுக்கோட்டைக்குச் சென்று பிறகு பஸ் பிடிச்சுப் போனோம்.

எங்க உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்ல. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் சரியானபடி நடவடிக்கை எடுக்கலைன்னா ஊரை காலி செஞ்சு, முதல்வர் வீடு முன்னாடி எங்களுக்குச் சுதந்திரம் வேணும்னு போராட்டம் நடத்தப் போறோம்என்றார் பாண்டி படபடப்போடு.

லிட்டில் டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி பர்வதாவர்த்தினி நம்மிடம், “அருந்ததியர் சமூகம் படிக்கக் கூடாது என்பதுதான் வடிவேல்கரை ஊர் மக்களின் நோக்கம். முருகன் படிப்பை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும். அவனும் நம்ம ஊர் வேலைக்காரனாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஊர் மந்தை வழியாக சைக்கிளில் சென்ற முருகன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அப்பதான் மற்ற அருந்ததியர் இன மக்களுக்கும் பயம் வரும்னு இப்படிச் செய்யறாங்க. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இப்படியொரு கொடுமை நடக்குது. அரசாங்கம் என்ன செய்யப் போகிறது. ஆதிக்கச் சாதியினர் ஊர்ல தலைகட்டு வரி போட்டு இந்த கேஸ்ல, அருந்ததியினர் ஜெயிக்கக் கூடாதுன்னு ஒன்றரை லட்ச ரூபாய் வரை பணம் திரட்டியிருக்காங்க.

ஊர் மந்தையில் வைத்து இவ்வளவு பெரிய கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், ‘போலீஸார் அவர்களுக்குள் குடும்பச் சண்டைஎன்று சொல்லுகிறார்கள். ஒரு தனி மனிதனோட அடிப்படை உரிமைகள் அனைத்தும் அந்த ஊரில் முற்றிலும் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மைஎன்கிறார் அந்தச் சமூக சேவகி.

வடிவேல்கரை பஞ்சாயத்துத் தலைவர் ஆறுமுகத்திடம் பேசினோம். நாங்க யாரையும் சைக்கிள்ல போகக்கூடாது, செருப்புப் போடக் கூடாதுன்னு சொன்னதே கிடையாது. எங்க ஊர் அமைதியான ஊர். நாங்க சாதி வேற்றுமையில்லாம தாயா பிள்ளையாத்தான் ஒற்றுமையா இருக்கோம். முருகன் குடும்பம்தான் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை வியாபார நோக்கத்தோட பயன்படுத்துறாங்க. எப்பப் பார்த்தாலும் எங்களை மிரட்டுறதுதான் அவங்களுக்குத் தொழில். இதுவரைக்கும் நாலு பி.சி.ஆர். கேஸ் கொடுத்து, முதல் கேஸ்ல நிவாரணம் பணம் வாங்கியிருக்கு அந்தக் குடும்பம். எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னுதான் கலெக்டர்கிட்டே சொல்லி அமைதிகமிட்டி போடச் சொல்லியிருக்கேன். தனிப்பட்ட பிரச்னையை சாதிப் பிரச்னையாக மாற்றப் பார்க்கிறார்கள். யாரு தப்பு செஞ்சாலும் தப்பு, தப்புதான். ரெண்டு பேரும் தனிப்பட்ட பிரச்னைக்கு மல்லுக்கட்டி புரண்டிருக்கானுங்க. போலீஸ் நேரடியாக வந்து விசாரணை பண்ணிட்டு போயிருக்காங்கஎன விளக்கம் கொடுத்தார் ஆறுமுகம்.

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=519&rid=26