திங்கள், 5 ஜனவரி, 2015

கூலிக்கு மாரடிக்கிறவனுக்கு எதுக்கு சுயமரியாதை - லிபரல்வாதிகள்


வேலையிலிருக்கும் தொழிலாளர்கள் இடம் மாறுகிறார்களே, முதலாளிக்கு மட்டும் பணி நீக்கம் செய்வதற்கு உரிமை இல்லையா? என்று லிபரல்கள் என்று கூறிக்கொள்ளும் தாராளவாதிகள் எப்போதும் போல முதலாளிகளுக்கு ஆதரவாகவே பேசுகிறார்கள். கொஞ்சம் நெருக்கி கேட்டால் நாங்கள் முதலாளிகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை, இந்தியாவில் இருப்பது க்ரோனி கேபிடலிசம்’ என்று கூறி தென்கொரியா, ஜப்பான் என்று கதை விடுகிறார்கள். அங்கும் அமெரிக்காவின் ஆதிக்கம் இருக்கிறதே என்று கேட்டால், பல்வேறு இணைப்புகளை தேடியெடுத்து அள்ளி வீசிச்செல்கிறார்கள்..

வேலையிலிருந்து தொழிலாளர்கள் வேறு வேலைக்கு செல்வது  ஏன்? கூலிக்காகத்தானே வேறு வேலைக்கு செல்கிறார்கள். கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் முதலாளிகள், உற்பத்தியிலிருந்து கிடைக்கும் லாபத்தை பெருவாரியாக சுருட்டிக் கொள்வது  ஏன்  என்ற கேள்வியை  ஏன் இவர்கள் கேட்பதில்லை. 2 பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான ஊதியத்தில் 4 பொருட்களை முதலாளிகள் ஊழியர்களிடமிருந்து உற்பத்தி செய்து கொள்வது  ஏன் போன்ற அறம் சார்ந்த எந்த கேள்வியையும் கேட்காமல்…தொழிலாளர்களிடம் வந்து அற போதனை செய்வது ஏன்?

இதிலே நுட்பமாக ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள். ”ஒரு தொழில் முனைபவர் தொழில் தொடங்கி லாபம் பார்க்கும் முன்னரே, அவருடைய தொழிலகத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கூலி பெறுகிறார்களே?” ஒரு தொழில் முனைபவர் லாபம் பார்க்கும் நோக்கத்தில்தான் ஒரு தொழிலை செய்கிறார், லாபத்தை பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்ற அடிப்படையில் பிறரின் உழைப்பை, கூலிக்கு மீறி உறிஞ்சும் போது, தொழிலாளர்கள் கூலியை பெறுவதே அறத்திற்கு மீறியதாகுமா?

அதோடு, தொழில் முனையும் ஒருவர்  எங்கிருந்து அந்த மூலதனத்தை திரட்டினார். அது அறத்திற்கு உட்பட்டதுதானா? என்ற கேள்விகளெல்லாம் நாம் இவர்களிடம் கேட்டால் பதிலேயிராது..

டி.சி.எஸ் என்னும் நிறுவனம் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் தொழிலாளிகளின் வயிற்றில் அடித்து கிடைக்கும் வேலையைத்தான் இங்கு கல்வி சந்தை உற்பத்தி செய்யும் அடிமைகளின் வழி குறைந்த கூலிக்கு செய்து கொள்கிறார்கள் என்பது தெரிந்திருந்தும், டி.சி.எஸிடம்  ஏன் அறம் பேசுவதில்லை?

இவர்கள் அறமே பேசுவதில்லையா என்ற கேள்வி வரலாம்..சில நேரம் பேசுவார்கள்தான்.. கேவலமான, முட்டாள்தனமான விவசாய கொள்கையின் வழி மக்களை விரட்டியடிக்கும் போது, அந்த விவசாய கொள்கைகளை குறித்து கேள்வி கேட்காமல், விவசாயிகளுக்கு ஆதரவாக நில்லாமல், குறைந்த கூலிக்கு பிற மாநில நகர்புறங்களில் கொத்தடிமையாக பணி புரியும் போது, எவ்வளவு வேலை வாய்ப்பு உருவாகியிருக்கிறது என்று புளங்காகிதமடைவார்கள்.

கிராமத்தின் நிலவுடமை கட்டமைப்பிலிருந்து இந்த கூலிகளுக்கு விடுதலை வழங்கியது இந்த முதலாளித்துவம்தானே என்று நியாயம் போல ஒன்றை பேசுவார்கள்….அன்றிலிருந்து இன்றுவரை நிலவுடமை நிலவுகிறதே? அதற்கெதிராக இந்த தாராளவாதிகள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியை நீங்கள் எழுப்பினீர்கள் என்றால்…ஒரு பதிலும் இராது… தற்பொழுதும் நிலவுடமை ஆதிக்கம் செலுத்தும் மேற்கு மாவட்டங்களுக்கு சென்று அமைப்பு கட்டி போராடுவார்களா என்றால் அதுவும் கிடையாது….ஆனால், ஒரு தீர்வு சொல்வார்கள்.. ஏன் கிராமத்தில் இருக்கிறார்கள்…கிராமத்தில் அடிமையாக இருப்பதற்கு மாறாக, நகரத்தில் அடிமையாக இருந்துவிட்டு போகலாமே? ஒப்பீட்டளவில் நகரத்தில் அடிமைத்தனம் குறைவே என்று அடிமையாக இருப்பதற்கு இலவச பயிற்சி வழங்குவதில் முன்னணியில் நிற்பார்கள்?

உரிமையை பெறுவதில் முன்னணியில் நில்லாதவரை, இதுபோன்ற தாராளவாதிகள் தாராளமாக ஆலோசனை வழங்கிக் கொண்டே, நம்மை அடிமைப்படுத்திவிடுவார்கள்...எச்சரிக்கை!!!

திங்கள், 8 டிசம்பர், 2014

கீதை புனித நூலா?





கீதை புனித நூலா?
=================
கீதையில் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு கீதா உபதேசம் செய்தானாம்...அதுவும் சண்டைக்கு நடுவுல.....அந்த புத்தகத்த இந்துக்கள்னு சொல்ற பெரும்பாலானவஙக பார்த்திருக்க கூட மாட்டாங்க...அப்படியே பார்த்திருந்தாலும் ஒருமுறை கூட படிச்சிருக்கா மாட்டாய்ங்க... இவ்வளவு பெரிய உரையாடலை சண்டைக்கு நடுவுல செஞ்சிட்டிருக்க முடியுமா? அப்படி செஞ்சிட்டிருந்தா அவன் லூசுப்பயலா இருக்க மாட்டானா? ஆனா, அதுதான் கீதா உபதேஷமாம்...

கீதா சரி சூழலை விட்டுட்டு உள்ளடக்கத்துக்குள்ள போலாம்னு பார்த்தா? அங்கேயும் பைத்தியக்காரத்தனம்...

அர்ஜூனன் தன் குடும்பத்தினரை கொன்னா....வர்ணாசிரம கட்டுப்பாடு சிதைஞ்சிடுமே...சாதிக்கலப்பு ஏற்பட்டுமேனு கவலைப்பட்டானாம்...அதை கிருஷ்ணன்கிட்ட சொன்னானாம்..
நீ ஏன் அதுக்கெல்லாம் பயப்படுறே, நான் அவங்களை ஏற்கனவே கொன்னுட்டேன்...நீ கொல்றதா நினைச்சு அகந்தையா திரியாதே...போ..போய் கொல்லுனு தைரியம் கொடுத்தானாம்...அப்படி தைரியம் கொடுக்கிறதுக்குதான் பெரிய உருவம் எடுத்து கண்கட்டி வித்தை காமிச்சானாம்….உடனே, பாஞ்சாலியை அடகு வச்சு ஆடுன கும்பலின் தலைமை தளபதி அர்ஜூனனும் அவங்க சகோதரர்களை சீவு, சீவுன்னு சீவிட்டானாம்…

இந்த கப்சா கதை எங்கே இருந்து எதற்கு எதிராக உருவாக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள புத்தனோட கதை இருக்கு…

புத்தரோட ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் காவிரி போல நீர்சிக்கல் வருது….பக்கத்து ஊரின் மீது போர் தொடுக்க புத்தரோட ஊர்காரங்க சொல்றாங்க…புத்தர் நீருக்காக போரெல்லாம் வேண்டாம், பேச்சுவார்த்தையின் மூலமே பிரச்சினையின் தீர்க்கணுங்கிறாரு…ஒத்த முடிவை எட்ட முடியாத போது வாக்கெடுப்பு நடக்குது, புத்தருடைய வாதம் தோத்துப் போகவே, அவர் காட்டுக்கு அனுப்பப்படுறார்….அதற்கு பிறகு புத்தர் சனாதன தருமத்திற்கு எதிராக தன்னுடைய கருத்து யுத்தத்தை தொடர்ந்தார், அதின் சனாதன தருமம் பெரிய வீழ்ச்சியை சந்திச்சது…

புத்தரோட கருத்துகள் செல்வாக்கு செலுத்தி வந்த சமூகத்துல, புத்தரோட கருத்த வீழ்த்த நுட்பமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த கீதை…

இந்த காப்பியடிச்சு, கூடவே நஞ்சு கலந்த புத்தகத்த சுஷ்மா சுவராஜ்ங்கிற அம்மணி புனித நூலாக்கணுங்குது…..

அந்த புனித நூல பெண்கள் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள்னு சொல்றதை தெரிஞ்சுதான் சொல்லுதா, இல்ல தெரிஞ்சே சொல்லுதாங்கிறது அந்த அம்மணிதான் சொல்லணும்…

அப்புறம் கீதைக்கு சொம்படிக்கிற சூத்திர பசங்க உள்ளிட்ட பெருமைக்குரியர்கள்..சூத்திரர்கள் என்றால் தாசி மக்கள் என்று கீதை சொல்வதையும், கீதை அர்ஜூனனுக்கு சொல்லப்படுவதற்கு முன்பாக மனுவுக்கு சொல்லப்பட்டதாக கிருஷ்ணன் சொல்வதையும் நினைவில் கொள்ளல் வேண்டும்..
கீதைல கிருஷ்ணன் நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேங்குறாரு…அதை நானே நினைச்சாலும் மாத்த முடியாதுங்கிறாரு…..தமிழ்நாட்டுல கஷ்டப்படுற பிராமணர்கள் கிரிக்கெட்ல, வங்கில, இன்னும் பல பன்னாட்டு நிறுவனங்கள்ல, கிரிக்கெட்ல கோலோச்சுவதற்காக கிருஷ்ணன் படைச்சாரோ?
வர்ணம் சாதி இல்லீங்க…அது வேறங்க பலர் சொல்லலாம்…குணத்தின் அடிப்படையில் அது மாறக்கூடியதுன்னு சொல்லலாம்..

எங்கய்யா மாறுச்சு….
-------------------------
கட்சிக்கு கட்சி தாவும் எஸ்.வி.சேகரை பிராமணனா இருக்க தகுதியில்லன்னு யாராவது தகுதிநீக்கம் பண்ணாங்களா?
சாராய கம்பெனிகளின் உயர்மட்ட பொறுப்பிலிருந்து ப்ரோக்கர் வேலை பார்க்கும் சோ.ராமசாமியையோ, அகில உலக ப்ரோக்கர் சு.சாமியையோ இதுவரைக்கும் தகுதி நீக்கம் பண்றேன்னு ஒத்த இந்து அமைப்பு இதுவரைக்கும் சொல்லிருக்கா?

வர்ணத்த படைக்கிறதோட நிக்காம, அவனவன் சுவதருமத்தை செய்யணும்னு சொல்றதுக்கு பெயர் என்ன? பிராமணனுக்கு சுயதர்மம் என்ன? சூத்திரனுக்கு சுயதர்மம் என்ன?

சுரண்டி திங்கிறதுக்கும், கொலை பண்றதுக்கும், ஏமாத்தி பொழைக்கிறதுக்கு ஐடியா கொடுக்கிற நூல்தான் புனித நூல்னா….அந்த நூலை அறுக்கிறதுதானே உழைக்கும் மக்களின் கடமையாக இருக்க முடியும்…

--------------------------------------------------------------------
அல்லது கீதையின் உபதேசத்தின் படி,

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அதுவே நன்றாகவே நடக்கிறதுன்னு இருந்தீங்கனா?

நாம விளங்கவேமாட்டோம்…..நம் அடிமைத்தனத்திலிருந்து நாம் மீளவே முடியாது?

திங்கள், 2 ஜூன், 2014

மீனவர்களுக்கானதா பாஜக அரசாங்கம்?

இலங்கையிடம் வலுவாகப் பேசி தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர்கள் பேசினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், மீனவர் நலன்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதா? என்று கேட்டால், மீனவர்களே அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏன் இப்படி நடக்கிறது?
உண்மையில், பாஜகவின் அணுகுமுறை, காங்கிரஸ் ஆட்சியாளர்களிடமிருந்து வேறுபட்டது அல்ல. பாஜகவின் கடந்த ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் கொல்லப்பட்ட போது, “வழி தெரியாமல் சென்றுவிடும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று இலங்கை கடற்படையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்றுதான் அவர்கள் கூறி வந்தனர்.
ஒரு எடுத்துக்காட்டுக்கு, அன்று ஆட்சியிலிருந்த கருணாநிதி நவம்பர் 28,2000 தேதியிட்ட கடிதம் ஒன்றை பார்க்கலாம். தே.ஜ.கூட்டணி சார்பாக அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு மீனவர் படுகொலையை தடுத்த நிறுத்த வேண்டுமென்று அவர் கடிதம் எழுதினார். அதற்கு டிசம்பர் 22, 2000 தேதியிட்டு எழுதிய பதில் கடிதத்தில் வாஜ்பாயும் இனி மீனவர் படுகொலை நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறினார். ஆனால், நடந்தது என்ன?
வாக்குறுதி அளிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரம் கடக்கவில்லை, 2 மீனவர்கள் ஜனவரி 29, 2001 அன்று 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். (இணைப்பு)
அதோடு மட்டுமல்ல, பாஜக ஆட்சிகாலத்திலும் மீனவர்கள் கொல்லப்பட்டனர். பாஜகவும் கண்டிப்பதாக சொல்லிக் கொண்டே இருந்தது. 2014 தேர்தலின்போது, கீழ்க்காணும் பட்டியலை மறைத்தபடியே பிரச்சாரம் செய்தனர், பாஜக அணியினர்.
8.12.1999 அன்று RMS 1512 என்ற படகில் சென்ற வழிவிட்டான்,
19.02.1999 அன்று RMS 600 என்ற படகில் சென்ற செல்வபாண்டியன்,
10.05.2000 அன்று RMS1126 என்ற படகில் சென்ற முனீஸ்வரன்,
19.06.2001 அன்று TU 328 என்ற படகில் சென்ற பாபு,
16.02.2001 அன்று RMS 583 என்ற படகில் சென்ற் முருகன்,
03.08.2001 அன்று RMS 1654 என்ற படகில் சென்ற சரவணன், கோட்டை, முனீஸ்வரன்,
18.10.2003 அன்று RMS 229/MB என்ற படகில் சென்ற பிரபு,
09.09.2004 அன்று RMS 401 என்ற படகில் சென்ற நாகநாதன் உள்ளிட்ட பல மீனவர்கள் இலங்கை கடற்படையால சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாம் பட்டியலைக் காட்டில் வாதிட்டால், “ஏதோ சில கொலைகள் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நடந்ததுதான். ஆனால், தற்போது, வந்திருக்கின்ற பிரதமர் மிகவும் ‘ஆண்மையான’ பிரதமர். ஆகவே, இலங்கை பயப்படும், சீனா அஞ்சும் என்று சவடால் அடிக்கின்றனர்.
உண்மை வெகுதூரத்தில் இல்லை. தற்போது பிராதமராக உள்ள, குஜராத் மாநில முன்னாள் முதல்வர் மோடியால் தன் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் படுகொலையை தடுக்க முடிந்ததில்லை.
ஜனவரி 27,2014 அன்று வந்த செய்தி குறிப்பின்படி,
“நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும், இந்த குறிப்பிட்ட மீன்பிடி காலத்தில் மட்டும் 150 பேர் கைது செய்யப்பட்டிருப்பதும், 32 படகுகள் முடக்கப்பட்டதும் நடந்திருக்கின்றது. இதற்கு எந்த அரசும் நிரந்த தீர்வு தரும் நடவடிக்கையை எடுக்கவில்லை” என்று மோடியிடம் கோரிக்கை வைக்கச் சென்ற குழுவில் இடம்பெற்ற பரத் மோடி என்னும் மீனவர் சங்க பிரதிநிதி கூறியிருக்கின்றார்.
மேலும், ‘ இலங்கையோடு பேச்சுவார்த்தை நடத்த முடியுமென்றால், பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன சிக்கல். நரேந்திர மோடி அவர்கள் இந்த பிரச்சனையை நடுவண் அரசுக்கு எடுத்துக் கூறி, உரிய தீர்வை எட்ட முயற்சிக்க வேண்டும். சிறிய கால இடைவெளிக்கு பிறகு, பாகிஸ்தான் அரசு மீனவர்களை விடுவித்தாலும், படகுகளை திரும்பத் தருவதில்லை. தோராயமாக அது திரும்ப தர வேண்டிய படகுகளின் எண்ணிக்கை மட்டும் 815’என்று அவர் கோரியிருக்கின்றார். (இணைப்பு – First post)
பிப்ரவரி 27,2014 ஆம் தேதி 30 குஜராத்தி மீனவர்களை பாகிஸ்தான் கப்பற்படை கைது செய்திருக்கின்றது. பாகிஸ்தானை பொறுத்தவரையில் 240 குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறையிலிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. (இணைப்பு – Times of India)
அதில் நவாஸ் ஷெரீபின் வருகையை ஒட்டி 150 மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தது.
14 அக்டோபர், 2013 அன்று பாகிஸ்தான் Marine ஒரு மீனவனை சுட்டுக் கொன்றிருக்கின்றது. இதுவரைக்கும் பாகிஸ்தானிய சிறைகளில் 14 மீனவர்கள் மரணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. (இணைப்பு – Times of India)
மோடியினுடைய ஆட்சி இருக்கும் பொழுதே, அவரது மாநிலத்தின் மீனவர்களை பாகிஸ்தான் இராணுவம் சுட்டுக் கொள்வதும், கைது செய்வதும் தொடர்கதையாகத்தான் இருந்தது, இப்போதும் தொடர்கிறது.
ஆனால் தனது பதவியேற்பு விழாவுக்கு நவாஷ் ஷெரிப்பை அழைத்த மோடி இதுகுறித்து பேசியதாக செய்திகள் இல்லை. மாறாக, இந்திய வர்த்தக நிறுவனங்களில் நலன்களை மையப்படுத்தியும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவுமே பேசியிருக்கிறார்.

ஆட்சி மாறினாலும், மாநிலங்கள் மாறினாலும் மீனவர்களின் நிலை நாடுமுழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கின்றது. ஆட்சியாளர்களும், மீனவர்களின் அவல நிலையை மாற்றும் அக்கறை இல்லை.
நம்மிடம் இருக்கும் ஒரே வழி, மக்கள் நலன்களை மையப்படுத்திய உறவை அண்டை நாடுகளோடு பராமறிக்கும் அரசுகள்தான். அப்படிப்பட்ட அரசை ஏற்படுத்த, எந்த அவதாரமும் மண்ணில் பிறப்பெடுக்காது. நமக்கான அரசை நோக்கிய பயணத்தை நாமே நடத்தி முடிக்க வேண்டும். நாளை நமதே, நாளை உழைக்கும் மக்களாகிய நம்முடையதே!.

நன்றி : மாற்று

பாகிஸ்தான் பிரதமரை மோடி அழைத்தது ஏன்?

(சார்க் நாடுகளின் பிரதிநிதிகளை தனது பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருக்கிறார் நரேந்திர மோடி, தேர்தல் பிரச்சார காலத்தில் அவர் அண்டை நாடுகள் குறித்து என்ன பேசினார் என்பதை நாம் அறிவோம். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நடந்திருப்பது தலைகீழ் மாற்றம்தான். இந்த மாற்றத்திற்கான காரணத்தை நமக்கு அறிவிக்கிறது ‘ட்ரூத் ஆப் குஜராத்’ இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையைத் தழுவிய இந்த பதிவு)
இத்தனை ஆண்டுகாலமும், சமீபத்திய 2014-தேர்தல் பிரச்சாரம் வரையிலும் பாகிஸ்தான் மீது நஞ்சை உமிழ்ந்துவிட்டு, கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் தனது பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமரை அழைத்துள்ளார் மோடி. இதன் உண்மையான நோக்கம் அமைதியின் மீதான நாட்டம்தானா? என்றால், கண்டிப்பாக இல்லை அதன் காரணம் அதானி என்பதாகத்தான் புரிந்து கொள்ள முடிகின்றது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கும் 10000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெரும்பகுதியை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய அதானி பவர் நிறுவனத்திற்கு மோடி அரசின் ஒப்புதல் வேண்டும். இந்த நிறுவனம் என்பது 8.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதானி குழுமத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமம் என்பது தனியார் மின்சார தயாரிப்பாளர்களில் முதன்மை பட்டியலில் இருக்கின்றது (இணைப்பு) என்பதுவும் இந்த நிதியாண்டிற்குள் இந்த 10,000 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான திட்டமும் கொண்டிருக்கின்றது இங்கே குறிப்பிடத்தக்கது.
நவாஸ் ஷெரிஃப் இந்திய பிரதமரை குறிப்பிட ‘கிராமத்து பெண்’என்ற சொல்லாடலை பயன்படுத்தால் ஏற்பட்ட சர்ச்சையை ஒட்டி ‘நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம்’ என்றும் ‘சகித்துக் கொள்ள முடியாதது’பாகிஸ்தானுக்கு எதிரான வன்மத்தை கக்கினார் மோடி. அப்போது பொழுது மோடியின் பாட்டுக்கு ஒத்தூதும் வேலையை செய்து வந்தன மைய ஊடங்கள். மோடி இந்த ‘அவமானத்தை பற்றி’ குறிப்பிடும் பொழுது “இந்திய பிரதமரை அவமானப் படுத்தும் விதமாக அந்த பேச்சு எழுந்த பொழுது, இந்த ஊடகவியலாளர்கள் நவாஸ் வழங்கிய இனிப்பை உண்டுக் கொண்டிருந்திருக்கின்றனர். இவர்கள் கண்டிப்பாக என் தேசத்து மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்கள் அந்த இனிப்புகளை உதைத்து தள்ளியிருக்க வேண்டும்.“ என்றெல்லாம் கறாராக பேசினார்.
இந்தியாவின் உலக மகா அரசியல் ஆய்வாளரும், கூச்சலின் நாயகருமான ‘அர்னாப் கோஸ்வாமி’, நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பற்றிய நிலைப்பாட்டை ஆய்வு செய்திருக்கின்றார். அந்த ஆய்வு மகாக்கடலின் ஒரு துளி இதோ,
“ பாகிஸ்தானை பொறுத்தவரையில் மோடி மிகவும் தெளிவாக இருக்கின்றார். தீவிரவாதம் தொடர்ந்தால் கண்டிப்பாக பாகிஸ்தானோடு உரையாடல் என்பதே இருக்காது என்று பதிவு செய்யப்பட்ட காணொளியில் உறுதியாக தெரிவித்திருக்கின்றார். கடந்த காலங்களில், அவர் மிதவாத நடுவழியை தேர்ந்தெடுப்பாரென்றும், தனது அணுகுமுறையில் மென்மையை கைகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தன்னுடைய அணுகுமுறையை மிகத்தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். ஏற்கனவே சொன்னது போல பதிவு செய்யப்பட்ட காணொளியில் கூறியுள்ளதால, வழக்கமான ஐ.மு.கூவின் நிலைப்பாட்டிலிருந்து பெரிய அளவில் வேறுபடும் என்பது உறுதியானது.”
இந்திய இராணுவ வீரர்களை கழுத்தறுத்தவர்களோடு உரையாடல்களை நடத்துவதை குறித்து அர்னாப் கோஸ்வாமி எடுத்த நேர்காணலில், “ துப்பாக்கி, குண்டுகளின் சத்தத்தில் பேச்சுவார்த்தை செவிகளுக்கு கேட்குமா?”இப்படியெல்லாம் பஞ்ச் டயலாக் அடித்த மோடி, பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்கப் போகின்ற சூழலில், அவருடைய ‘இரும்புக்கரத்தை’ காயலாங்கடையில் போட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தொடர்பான நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்திற்கான காரணத்தை ஊரெங்கும் ஜனநாயகத்தை பேசித் திரியும் ஊடகங்களால் சுதந்திரமாக பேச இயலவில்லை. காரணம் பெரிதாய் ஒன்றும் இருக்காது ‘அப் கி பார், மோடி சர்க்கார்’ என்பதாகத்தான் அது இருக்கும்.
இன்று அந்த ஊடகங்கள் பழைய அவருடைய பஞ்ச் டயலாக்குகளின் இன்றைய நிலை குறித்தெல்லாம் பேசாமல், நவாஸ் ஷெரிபை அழைக்கும் அழைப்பிதழுக்கு பிழை திருத்தம் செய்வதிலும், டிசைன் செய்வதிலும் மும்முரமாக இருக்கின்றார்களோ என்னவோ? இந்த டிசைன் செய்வதினூடாக, மோடியின் முடிவெடுக்கும் ‘ஆண்மையான’பாணிக்கும் பங்கம் வராத வண்ணம், பிராந்திய நல்லிணக்கத்திற்கான ‘ஆண்மையான’ முடிவு என்று காவி கலரை வீசி ஹோலி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
அதானி குழுமத்தை பொறுத்தவரையில் மேற்சொன்ன கட்ச் திட்டத்தை பற்றி ஐ.மு.கூ-2 அரசிடம் முன்மொழிவுகளை வைத்தனர். பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால், ‘பெரும்பான்மை’ பலம் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் தே.ஜ.கூ அரசாலாவது அந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் என்று தொழுது காத்து கிடக்கிறது அந்த குழுமம். 3300 மெகாவாட் மின்சார உற்பத்தி திறனை அடுத்த ஐந்தாண்டுக்குள் 10,000 மெகாவாட்டுக்கு முன்னேற்றும் திட்டமும், அதை பாகிஸ்தானுக்கு விற்கும் திட்டமும் இணைந்தே இருக்கின்றன.
தகவல்களின்படி, தொடக்கமாக 13000 கோடி ரூபாய் முதலீட்டை கோரும் இத்திட்டத்தை 10,000 மெகாவாட் அளவுக்கு முன்னேற்றுவதற்கு 40,000 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. இத்திட்டம் கட்ச் மின் உற்பத்தி நிறுவன கழகம் என்னும் அதானி குழுமத்தின் துணை நிறுவனம் சார்பாக நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்வு ஆகிய பொறுப்பை இந்நிறுவனமே மேற்கொள்ளும். இதற்காக கட்ச் பகுதியில் பத்ரேஸ்வர் என்னும் இடத்தில் நிலத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டத்திற்கு தம் ஆட்சேபனையை தெரிவித்திருப்பதோடு, தங்களுடைய வாழ்வாதாரமும், வாழ்விடமும் பாதிக்கப்படும் என்று மீனவர்களும், உப்பள ஊழியர்களும் குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மக்கள் தொடர் கடிதங்களும், மனுக்களும் எழுதியிருக்கின்றனர். (தமிழக மீனவர்களை மோடி பாதுகாப்பார் என்ற பிரச்சாரம் எத்தனை பிம்மையானது என்பதை இந்தப் பின்னணியில் பார்க்கும்போது புரியும்) ஊதிப் பெருக்கப்படும் உலக நாயகன் மோடி ஏழை மக்கள் சார்பாக நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை. அவரது பார்வையில் ஏழைகள் என்பவர்களே அதானியும், அம்பானியும் தானே.
ஏழைகளுக்கான அரசு, ஏழைகளின் அரசு என்றெல்லாம் நாடாளுமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு அழும் மோடியின் நண்பரான அதானியின் குழுமத்தின் நிகர லாபம் 2529 கோடிகள்(மார்ச் 31ல் முடிந்த நான்காவது காலாண்டு) , அதற்கு முந்தைய ஆண்டில் 585.52 கோடி ரூபாய் நட்டம் என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், மோடியின் குஜராத் அரசு இப்படியான ஏழைகளுக்குத்தான் உதவி செய்யும் என்பது கடந்த கால வரலாற்றை கொஞ்சம் அடிப்படை அறிவோடு கற்பவர் அறிந்து கொள்ளக் கூடிய எளிய உண்மையாகும்.
மக்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள மோடி வகையறாக்கள் கைகொள்வது சொல்வீச்சுதான். அதுவும் மக்களை தங்கள் அன்றாட அடிப்படை பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி ‘கோவில் கட்டுறேன், கூடாரம் கட்டுறேன்’ என்று சிறுபான்மை மக்களை கை காண்பித்து அவர்களோடு குடுமி பிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது, எவ்வித தடையும், எதிர்ப்பும் இல்லாமல் நாட்டை கூறுபோட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்று, அவை நம்மை கொள்ளையடிக்கும் படி சேவை செய்து தன்னுடைய பிறவிக்கடனை இந்த காவிப்படைகளின் அடியாள் செவ்வனே செய்து முடிப்பார். இதற்கு வலு சேர்க்கும் விதமாக, மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 13,2013 க்கு பிறகு 6 பில்லியன் டாலரை தன்னுடைய வளத்தில் சேர்த்துக் கொண்டார் என்று ப்ளூமெர்க் பத்திரிக்கை சொன்னதில் வியப்பேதுமில்லை. அம்பானியால் மட்டும்தான் இது சாத்தியமாயிற்றா என்றால், மோடியின் ‘ஏழை’ நண்பன் அதானியும் இது போன்ற சாதனையை செய்திருக்கின்றார். அதாவது, செப்டம்பர் 13 இல் 1.9 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு, 7.6 பில்லியன் டாலராக, ஏறக்குறைய 4 மடங்காக உயர்த்தியிருக்கின்றார்.
எப்படியென்று யாரும் கேக்காதீர்கள், கடின உழைப்பு என்று வியாக்யானம் செய்வார்கள் … மக்களுக்கு தேசபக்தி போதையேற்றி, பாகிஸ்தான் எதிரி நாடு, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று பஞ்ச் டயலாக் பேசும் இவர்கள், தன்னை வழிநடத்தும் முதலாளிகளுக்கு சேவகம் செய்ய தேசம் கடந்து வாசல் திறந்துவிடுவதையும், தேசபக்தி என்பது மக்களை ஏய்க்கும் முதன்மை கருவியாக இருப்பதையும் இந்தச் சூழலில் அன்பர்களும், நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம். மோடி வகையறாக்கள் ஆளும்வரை முதலாளிக்கான நல்ல நாள் வந்துவிட்டது என்று அந்த ஆளும் வர்க்க கும்பல் நம்பத்தான் செய்யும். ஆனால், நமக்கான நல்ல நாள் வர நாம்தான் கடுமையாக உழைத்தாக வேண்டும். இந்த முதலாளிகளின் ஆட்சியை வீழ்த்தியே ஆக வேண்டும்.
——
நன்றி: ட்ரூத் ஆஃப் குஜராத் இணையம்.