வியாழன், 26 ஆகஸ்ட், 2010

நியூட்டனுக்கு கோயிலா கட்டினார்கள் - அண்ணா

ஒரு பழம்! உலகுக்கே உன்னதமான ஆராய்ச்சிகளை வழங்கிற்று.
சின்ன்ஞ்சிறு ஆப்பிள்! மரத்திலிருந்து விழுந்தது!! – அது தந்தது, அருமையான சிந்தனையை.
“ஏன், விழுந்தது?” – பழம் விழுந்ததை பார்த்தவன். கேட்டான், தன் உள்ளத்தை,
பிறரை பார்த்துக் கேட்டுருந்தால், “பழம்,ஏன் விழும்? பழுத்ததால், விழுந்திருக்கும்!” என்றே பதில் அளித்திருப்பர். இந்தப் பதில் பலரும் சொல்லக் கேட்டு, அவன் சலித்துப்போன பதில். ஆகவே, தன் மனதை கேட்டான். “விழுந்த பழம் நேரே, ஏன் பூமியை நோக்கி விழவேண்டும்?” கேள்வி, கிண்டலுக்கு ஆளாக்கும்,எவனாவது இன்னொருவனை கேட்டால், அவனோ, தன் சிந்தனையைக் கேட்டான்! சிறுகல்லை ஆகாயத்தில்; வீசி, அதுவிழும் வேகத்தைக் கணக்கிட்டான்!! உயரமான இடத்திலிருந்து ஒரு பொருளைப் போட்டு அது பூமியை நோக்கி வந்துசேரும் வினாடிகளை எண்ணினான்! விளைவு, விஞ்ஞான உலகுக்கு, விசித்திரமான உண்மை கிடைத்தது – நியூட்டன் – வரலாற்று மனிதனான் – பூமிக்கு, ஆகர்ஷண சக்தி உண்டென்று விளக்கினான். இது, அங்கே – இங்கிலாந்தில்!
ஒரு பழம் – உன்னதமான, உண்மையை, உலகுக்கு வழங்கிற்று.
இதோ ஒரு பழம்! பாராத பிரசங்கி, பக்தி பிரவாகத்தோடு விவரிக்கிறார் – பாண்டவர்கள் ஆரண்யவாசம் செய்தபோது, பாஞ்சாலி கேட்க, அர்ஜூன்ன் அறுத்துத்தந்தானாம். அது, முனிவர் ஒருவருடையதாம்! அவர் கண்டால் ஆபத்து என்றஞ்சி, இருந்த இடத்திலே அதைக் கொண்டு வைக்க தர்மரும், தம்பிகளும் சக்கரபாணியை துதித்தனராம் – நீலமேக சியாமள வர்ணன் வந்தாராம் – நெஞ்சத்து உண்மைகளை ஒவ்வொருவரும் சொன்னால், மரத்துக்கு பழம் போகும் என்றாராம். ஒவ்வொருவரும் உண்மைகளைச் சொல்ல, கீழே விழுந்த பழம், உயர நோக்கி ஓரிடத்தில் வந்து நின்றதாம் ! பாஞ்சாலி, உண்மையை மறைத்தாளாம் – உடனே பழம் பூமிக்கு வந்ததாம் – கண்ணன் சிரித்துக் கொண்டே, “ நீ பொய் சொன்னாய் திரௌபதா!” என்று சொல்ல, அவள் உண்மையைச் சொன்னாளாம் – “அய்வரின் பத்தினி நான்! இந்த அய்வர் எனக்கிருந்தாலும் கூட, உள்ளத்தின் ஒரு கோடியில் கர்ணன் மீதும் என் கண்கள் பதிந்திருக்கின்றன”, என்று பக்திரசம் சொட்ட வர்ணிக்கிறார், புராணிகர்!

“ அய்ம்புலன்களும்போல்
அய்வரும் பதிகளாகவும்
இன்னும் வேறொருவன்
எம்பெருங்கொழு தனாவதற்கு
உருகும் இறைவனே
எனது பேரிதயம்
அம்புலிதனில்
பெண் பிறந்தவர் எவர்க்கும்
ஆடவர் இலாமையினல்லா
நம்புதற்குளதோ
வென்றனள் வசிட்டனல்லற
மனைவியே யனையாள்”

இன்னம் வேறொருவன்! எம் பெருங்கொழுனாவதற்கு! கவனித்தீர்களா, கவிதையை? உருகுதாம் உள்ளக்ம்! புராணிகரும் மனம் உருகியே வர்ணிக்கிறார், இதனை! இந்த உண்மை கேட்டதும்...உடனே பழம்போய் ஒட்டிக்கொண்டதாம்!
 ஒரு பழம் – விஞ்ஞான உண்மையை தர பயன்பட்டது, அங்கே
 ஒரு பழம் – புராண பெருமையை விளக்கப் பயன்படுகிறது இங்கே
 நியூட்டனுக்கு கோயில் கட்டி யாரும் கும்பிடவில்லை, அங்கே
 வேதவியாசருக்கும், கண்ணபிராணுக்கும், ‘பத்தினி’ பாஞ்சாலிக்கும், விழாக்கள் குறைவில்லை இங்கே.

 இரண்டும், கீழே விழுந்த பழங்கள் தான்! என்ன செய்வது! அறிவு நடைபோடுகிறது, அங்கே! மகாத்மீயம், பவனிவர முயல்கிறது, இங்கே!
‘திராவிட நாடு’ 5.12.1948

பூணூல் தத்துவத்தின் மீதான பாசமும்...பூணூல்களின் மீதான கோபமும்

சாதிவாரியாக மக்கள் தமது பாட்டன், முப்பாட்டன் சாதியின் பெயரால் செய்து வந்த தொழிலை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக செய்ய வேண்டும், என்பதுதானே...அதைத்தானே இந்து மத அவதார யோக்கியன்(?) கண்ணன் தன் கீதையில் சுவதருமம் என்று கூறுகிறான். அந்த தரும்ம் அழியும் போதுதான் தான் மீண்டும் தோன்றுவேன்என்று கீதையில்யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத। அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ... யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்। பரித்ராணாய ஸாதூநாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்।தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே என்று மிரட்டுகிறான். அதே கண்ணனின் தரகர்களிடம்தான் இப்பொழுது கருத்து யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

பெரியாருக்கே அல்வா கொடுத்துவிட்டு, ஈரோட்டு பகுத்தறிவு பேரொளியை மங்கலாக்கிய பார்ப்பனீய கூட்டாளிகளின் அதே பார்ப்பன குரல்... தமிழகத்திலிருந்து மீண்டும். கிளம்பியிருக்கிறது ஒன்று கிண்டல், மற்றொன்று வேண்டுகோள்

முதலில் கிண்டல்

கலைஞர் தொடங்கி பேரன் வரையிலான திரைத்துறை ஆதிக்கத்தை குறித்தது...வந்தது ஒரு பார்ப்பன இதழில்..

““கலைஞர் வரலாற்றிலேயே முதன் முறையாக - கலைஞர் கதை வசனத்தில் - கலைஞர் பேரன் தயாரிப்பில் - கலைஞர் பேரன் இயக்கத்தில் - கலைஞர் பேரன் நடித்த - புத்தம் புதிய திரைக்காவியம் - கலைஞர் டி.வி. யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள்

இந்த கிண்டல் கலைஞரை மிகவும் பாதித்து விட்டதாம்……

விடுவாரா கலைஞர்….புலம்பி தீர்த்து விட்டார்…..அவரின் புலம்பலின் விரிவான சுறுக்கம்

““என்ன; கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா? நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா? அந்தக் குடும்பத்திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா? தனுஷ் நடிக்கக் கூடாதா?”

இதைத்தானே சுவதருமம் என்கிறது பார்ப்பன தத்துவம்….அதை தமிழகத்து குல்லுக பட்டர் ராஜாஜி, அதாவது கலைஞர் கூட்டத்தின் முதல் கூட்டாளி குலக்கல்வி திட்டமென அறிவித்தார்...பெரியார் மற்றும் சில தமிழக தலைவர்களின் எதிர்ப்புக்கு பிறகு கைவிடப்பட்டது..

ஆனால், இதே கலைஞர் தமது இயக்க மேடைகளில் படத்தில் மட்டும் பெரியாரை வைத்துக் கொண்டு, தம் குடும்பம் அரசியலில் மட்டும்தானா கொள்ளையடிக்க வேண்டும், வாரிசு வாரிசாய்

சினிமாவில் கொள்ளையடிக்க உரிமையில்லையா? என்று மனுதரும காவலர் என்ற உரிமையோடு கேட்கிறார்…(மக்கள் தலைவர் சு.சாமிக்காக சூத்திர வழக்கறிஞர்களை அடித்து நொறுக்கியது நினைவில் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல..)

பூணூல் கூட்டத்திற்கோ இந்நேரத்தில் வேறு சிந்தனை நூலறியா, பூணூலறியா வடிவரசி மம்மி ஜெயலலிதாதான் சுரண்ட வேண்டும். அந்த அம்மா எவ்வளவு வெளிப்படையா ஆர்லிக்சு மட்டும்தான்(அழுத்தம் எமது) திருடலைன்னு சொல்றாங்க….தமிழகத்து பிஜேபியின் தலைவராக, மன்னிக்கவும், அ.தி.மு.கவின் தலைவியாகவும் இருக்கிறார். அப்படியிருக்க மிக மிக என்று 100க்கு மிகாமல் போட்டுக் கொள்ளும் தலைவனை கொண்ட அமைப்பு எப்படி சுரண்டலாம்…..

தெற்காசிய முதலாளித்துவத்தின் புனைபெயரான பார்ப்பனீயத்தை காப்பாற்றா விட்டால் கண்ணன் என்னும் Play Boy கடவுள் வந்து அவதாரம் எடுத்து ஜகத்தை அழிச்சுடுவாரோயில்லையோ……

ஏதோ கலைஞர் ஈரோட்டு நினைப்பில் தமிழர் தலைவர்(எத்தனை பேருடா கிளம்பிருக்கீங்க?) வீரமணி எழுதிய கீதையின் மறுபக்கம் நூலை ராமகோபாலனுக்கே கொடுத்தார்..அதற்கு பரிகாரமாய்த்தான் வைத்தியநாதனையும், இந்து ராமையும் அழைத்து அழைத்து செம்மொழி மாநாடு நடத்தி விட்டாரே? இன்னும் ஏன் இந்த பார்ப்பனர்களுக்கு தன் மீது கோபம் தொடர்கிறது என்பதுதான் கலைஞரின் உள்மன ஆதங்கம்..

(செம்மொழி‍ - காரணப் பெயர்

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்
பாவலர் அறிவுமதி)

பார்ப்பனீயம் உட்பட அனைவரது கருத்துக்களையும் அரவணைத்துச் செல்லும் கருணாநிதியின் இந்த உயர்ந்த அரசியல் பண்பை பார்ப்பன பத்திரிக்கைகள் புரிந்து கொண்டார்களா? நன்றி கெட்டவர்கள்...மீண்டும் அவர்களின் பார்ப்பன பாசம் ஜெயலலிதாவை நோக்கி திரும்பி போக வைத்து விட்டதே என்ற வருத்தம்தான் தமிழக கருணாவை வாட்டி வதைக்கிறது

(பொறுக்கி தின்பதற்கு பெயர் இந்நாட்டில் அரசியல் பண்பு, கூட்டணி தருமம்)

ஆனால் , இதற்கெல்லாம் அசந்திடுவோமா என "சுரண்டல் பார்ப்பனீயத்தின் சொத்து, ஐந்தாண்டுக்கு மேல் உமக்கு ஜால்ரா தட்ட முடியாது" என்று புரட்சி முழக்கத்தோடு கிளம்பிற்று காண் சிங்க சமஸ்கிருத கூட்டம்(நன்றி: செம்மொழி மாநாடு).

பூணூல் தத்துவம் பாசம் வெற்றி பெறுகிறதா? அல்லது பூணூல் வெற்றி பெறுகிறதா என்று பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்அதுவரை மானாட மயிலாட பார்ட்-5..

தமிழ் வாழ்க!!!

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

செந்தமிழர் நாட்டைச் சிறை மீட்க........! - பாரதிதாசன்

“செந்தமிழை; செந்தமிழர் நாட்டைச் சிறை மீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே.”

“பொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனித மோடதை எங்கள் உயிரென்று காப்போம்
உடலைக் கசக்கி உதிர்த்த வேர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுலக உழைப்பவர்க்கு உரியதென்பதையே.”

“கைத்திறனும், வாய்த்திறனும் கொண்ட பேர்கள்
கண்மூடி மக்களது நிலத்தை யெல்லாம்
கொத்திக் கொண்டு ஏப்பம் விட்டு வந்ததாலே
கூலி மக்கள் அதிகரித்தார், என்ன செய்வேன்
பொத்தல் இலைக் கலமானார் ஏழை மக்கள்
புனல் நிறைந்த தொட்டியைப் போல் ஆனார் செல்வர்.”

“இந்த நிலை இருப்பதனால் உலகப்பா நீ
புதுக்கணக்கு போட்டுவிடு; பொருளையெல்லாம்
பொதுவாக எல்லோர்க்கும் குத்தகை செய்.”

“பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்தே
துஞ்சி மடிகின்றாரே – இவர்
துயர்களை தீர்க்க ஒர் வழியில்லை - அந்தோ
நெஞ்சு பொறுக்குதில்லையே.”

“ஆடுகிறாய் உலகப்பா யோசித்துப்பார்
ஆர்ப்பாட்டக்காரர் இதை ஒப்பாரப்பா
தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன்.”

“ஓடப்பாயிருக்கும் ஏழையப்பர்
உதையப் பராகிவிடில் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிடுவர் உணரப்பா நீ”

“சதுர் வர்ணம் வேதன் பெற்றால்
சாற்றும் பஞ்சமர் தம்மை
எது பெற்று போட்டதடி - சகியே
எது பெற்று போட்டதடி?”

“ஊரிற் புகாத மக்கள்
உண்டென்னும் மூடர் – இந்த
பாருக்குள் நாமேயடி – சகியே
பாருக்குள் நாமேயடி”

“குக்கலும் காகமும் கோயிலிற் போவதில்
கொஞ்சமும் தீட்டில்லையோ? – நாட்டு
மக்களில் சிலர் மாத்திரம் – அந்த வகையில்
கூட்டில்லையோ?”

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

நீங்கள் வணங்குவது அறியாமையைத்தானே - அம்பேத்கர்

ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்ளும் தலித்துகளை நோக்கி,
நம்முடைய மக்களின் எத்தனை தலைமுறைகள் இப்படி இந்த ஆலயப் படிக்கட்டுகளில் தம் நெற்றியை தேய்த்து தேய்த்து, தேய்ந்து போயின. எந்த காலத்திலாவது இந்தக் கடவுள் உங்களுக்குக் அனுதாபம் காட்டியதுண்டா? அதன் மூலம் என்ன பெரிய பலன் கிட்டியுள்ளது? தலைமுறை தலைமுறையாக இந்தக் கிராமத்தின் குப்பைகளைக் கூட்டியதற்கு இந்தக் கடவுள் உங்களுக்கு கொடுத்ததென்ன? செத்த மாட்டைத் தானே, நீங்கள் வணங்குவது கடவுளை அல்ல, உங்கள் அறியாமையைத்தானே…. – அம்பேத்கர்