திங்கள், 15 ஆகஸ்ட், 2011

மலத்திற்கு சமானம் இந்நாட்டின் விடுதலை...

நல்லதொரு இரவுப்பொழுது, மும்பையின் கொட்டும் மழை...நாங்கள் அதை பேய் மழை என்று கூட கூறுவோம்..பல வேளைகளில் மழையின் பொழுதே மின்சாரம் துண்டிக்கப்படும்....அந்த குளிரில், வழக்கமான அச்சமூட்டும் பேய்களின் குரலும் சில நேரங்களில் இடிவழியாக கேட்கும்...நான் காதை பொத்திக் கொண்டு, போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்க முயற்சி செய்வேன்...சிறிய அறையில் நான் என் இரு தங்கைகள்,என் தகப்பன், தாய் என ஐந்து பேர்....கிராமத்தின் சமையற்கட்டு அளவு கூட இல்லாத வீடு...நானும் தங்கைகளும் அருகருகே பேய்க்கு பயந்து, காலிலிருந்து போர்வை விலகிவிடாதபடி...நெருக்கி படுத்துக் கொள்வோம். போர்வையை வைத்து உடலை மூடிக் கொண்டால் பேய் வராது என்றொரு நம்பிக்கை எனக்கும், என் தங்கைகளுக்கும்..



தலையில் தீச்சட்டியோடு ஒரு பேய், கருப்புடை அணிந்திருக்கிறது( அப்படித்தானே படத்தில காண்பிச்சானுங்க)...என்னை துரத்திக் கொண்டே ஓடிவருகிறது, நானும் என்னால் இயன்ற அளவு ஓடிக் கொண்டேயிருந்தேன்...ஒரு கட்டத்தில் தனது மந்திர சக்தியால் நேரடியாக தன் கையை நீட்டி என் தோளை தொட்டே விட்டது. ஆ..ஆ..என்று நான் அலறி எழ..."என்னடா எந்திரி..எந்திரி...வீட்டுக்குள்ளே தண்ணி வந்துடுச்சு.."தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டு நின்றது.தண்ணீர் காலை நனைத்த சுகத்தில் மீண்டும் நான் தூங்க சென்றேன்...வீட்டிற்குள் உறங்கும் வேளையில் மூலையில் ஒதுக்கி வைக்கும் கட்டிலை விரித்துவிட்டு..என் அப்பனும், ஆத்தாளும்...என்னையும்,என் தங்கைகளையும் கட்டிலில் அமரவைத்து உறங்கச் சொன்னார்கள்...அப்பொழுதுதான் மெல்ல உறக்கம் கலைந்தது..வீடெல்லாம் மலம்....மிதக்கும் வெளியாக மழைநீர் கலந்த சாக்கடை நீர்...கடந்த சில ஆண்டுகள் முன்புவரை...நாங்கள் வசித்த சாலில்(தெருவில்) இதே நிலையில்...இரவெல்லாம் விழித்து, உறங்கி, விழித்து, உறங்கி நான் விழித்திருக்க...தண்ணீர் வந்து வீட்டிற்குள் கொட்ட கொட்ட இறைத்து இறைத்து வெளியே தண்ணீரை வெளியேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்...அள்ளி தெளித்த தண்ணீர் கண்டிப்பாக சில, பல மலத்துளிகளை அவர்தம் உடலில் தெளித்திருக்கும்..


இந்த அனுபவத்தை என்றுமே அனுபவத்திராத சோனியா காந்தி, மன்மோகன் சிங், ஜெயா, கருணா உள்ளிட்ட மேன்மைமிகு தலைவர்கள்(த்தூ.............) எனக்கு வாழ்த்து செய்தி சொல்லுதுங்க...நானும் வெட்கங்கெட்டத்தனமான மலத்திற்கு சமானமான இந்நாட்டின் விடுதலையை கொண்டாடணுமாம்..

===================================================================

இன்னும் ஒடுக்கப்பட்ட சகோதரர்களை மலமள்ள 100% இட ஒதுக்கீடு செய்து வைத்திருக்கும் இந்த கேடுகெட்ட இந்தியாவின் விடுதலையை மலத்திற்கு ஒப்பிடாமல் எதோடு ஒப்பிடுவது..