சனி, 23 ஜூன், 2012

பாலியல் தொழிலாளியின் தமிழ் முத்தம்

அடர்ந்த பிரதேசம் அது. Sex Ratio அதிகம் உள்ள இடம் அது. பெண்கள் அதிகம் உள்ள பகுதி என்று எடுத்துக் கொண்டாலும் சரி, Sex அதிகம் நடக்கும் இடம் என்று எடுத்துக் கொண்டாலும், தாராவியிலிருந்து தினமும் 20 நிமிடம் ரயில் பயணத்திற்கு பின், 10 நிமிட நடையில் நான் நாளும் கடந்த பகுதி அது. அந்த பகுதிக்கு அருகில்தான் என் அலுவலகம். அலுவலகத்தில் நிரம்ப பெண்கள் நிரம்பியிருப்பர், அது இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்திற்காக பணி புரியும் ஒரு கால் சென்டர். என்னோடு பணிபுரியும் பெண்கள் தேவதைகளாகவும், கஞ்சிக்காக வெளியே அரைகுறை உடையோடு காத்திருக்கும் பெண்கள் பரத்தைகள் என்ற புரிதலோடுதான் நான் இருந்தேன். உடன் பணிபுரியும் பெண்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, அந்த பெண்கள் மீது ஏனோ வந்ததில்லை. அவர்கள் ஏதோ சொந்த விருப்பத்தின் பெயரில் அந்த தொழிலில் ஈடுபடுவதாக ஆழ் மனதில் பதிந்து போனது கூட காரணமாயிருக்கலாம். ஒரு நாள் என்னுடன் பணி புரியும் தோழியை வேலைக்கு வரும் வழியில் இடைமறித்து ஒரு தரகர் அந்த தொழிலுக்கு அழைத்த நிகழ்வு புரிதல் இல்லாமல் அந்த பெண்கள் மீதேதான் திரும்பியது.

நாட்கள் உருண்டோடின, மும்பையின் வாழ்க்கை முறை தமிழகத்தின் மீது தந்த ஈர்ப்பு சென்னைக்கு இழுத்து வந்தது.

சினிமா மோகத்தோடு வந்த என்னை சென்னை என்னை வரவேற்று ஒரு ஓலை குடிலுக்குள் தள்ளியது. அப்படியே ஒரு போலி சினிமா இயக்குனரிடம் உதவி இயக்குனராக இணைந்து பணி புரியும் வாய்ப்பையும் தந்தது. பெண்களை போகப்பொருளாக மட்டும் பார்த்து பழகிய பல பழைய முகங்களின் பிரதிபலிப்பாகத்தான் அவர் இருந்தார். உனக்கு சான்ஸ் தந்தா? எனக்கு என்ன கிடைக்கும்?” என்கிற ரீதியில்தான் அவரது பேரமே தொடங்கும். அவரோடு பயணித்த அந்த நீண்ட நாள் அயர்ச்சியை தந்ததேயன்றி சினிமாவின் கெண்டைக்கால் மயிரைக்கூட கடைசி வரை காண்பிக்கவில்லை. பொருளாதார சிக்கல் காரணமாக மீண்டும் ஒரு மாத காலத்திற்கு மும்பை சென்றேன். நல்ல மழைக்காலம். ஒரு போலித்தனமான மின்னஞ்சலில் 5 கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாய் நம்பி ஆந்திரத்தில் பிரபலமான இயக்குனரும், தமிழ்த் திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்த நடிகையின் கணவருமாகிய ஒருவரோடு என் இயக்குனரும் மும்பை வந்து சேர்ந்தார். பல முயற்சிகளுக்கு பிற தம் பணத்தாசை தவறானது என்று உணர்ந்தவர், மும்பையின் இரவு வாழ்க்கையை காணவிரும்புவதாக கூறினார். நானும் எனக்கு தெரிந்த மும்பை நிழுலகத்தில் முன்பு தீவிரமாக இயங்கி வந்த ஒரு நபரை துணைக்கு அழைத்துக் கொண்டு கிராண்ட் ரோட்டிற்கு சென்றேன். கூடவே ஓட்டுனரான ஒரு நண்பரும் வந்தார்.

நாங்கள் அவ்விடத்தில் முதலில் சென்றது, ஒரு லேடிஸ் பாருக்கு. அங்கே பக்கவாதம் வந்த ஒரு

அல்லக்கைகள் பணத்தை இறைத்துவிட, அங்கே நடனமாடும் பெண் தன் இடுப்பு வளைவுகளின் அசைவுகளின் வழி அந்த பணத்தை அள்ளிக் கொண்டிருந்தாள். பாரில் (உலகில் அல்ல) ஒரு ஓரத்தில் அமர்ந்து இதை ரசித்துக் கொண்டிருந்த இயக்குனர், இந்த பெண்ணையே நம் திரைப்படத்தில் நடிக்க வைத்தாலென்ன? என சிந்திக்க தொடங்கியிருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்த பெண்ணின் தொடர்பு எண்ணை அவரால் கடைசிவரை பெறவே முடியவில்லை. அங்கிருந்து கிளம்பி நேராக காமாட்டிபுரா பகுதிக்கு சென்றேன்.

கடைக்கண் பார்வைதனை கன்னியர்தம் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்என்று கேட்ட வசனம் அங்கே பொய்த்து போனது. கடைக்கண் பார்வைக்கு அங்கே 100, 200, 500 என விலை அட்டை தொங்கவிடப்பட்டது போல இருந்தது. வண்டியிலிருந்தபடியே இதை நோட்டம் கொண்டிருந்த எனக்கு முன்னிருக்கையில் இருந்து இறங்கி கீழே சென்று வர வேண்டுமென்று ஆவல். இறங்கி அருகிலிருந்து பெட்டிக்கடைக்கு சென்று ஒரு கோல்டு ஃபிளாக் சிகரெட்டை வாங்கி பற்ற வைத்ததுதான் தாமதம்.

பாய் பகூத் படியா அய்ட்டம் ஹை, ஷிர்ஃப் 500 ருப்யே, 2 ஷாட் என்றான் என் பின் நின்றிருந்த ப்ரோக்கர்.

நஹி பாய் என்று முன் நகர்ந்தால், நான் இருந்த இருக்கையில் வெள்ளை காக்ரா சோலி அணிந்திருந்த பெண் அமர்ந்து கொண்டு அந்த ஓட்டுனரை தடவிக் கொண்டிருந்தாள். மெல்ல அவளை சமாதானப்படுத்துவதாக நினைத்து வண்டிக்கு வெளியில் காத்திருந்தால், அவள் இருக்கையை விட்டு எழுந்து வெளிச்சென்றதுதான் தாமதம், இவர்கள் சமாதானமின்றி அவள் பின்னே சென்றுவிட்டனர். உள்ளே இரண்டே, இரண்டு படுக்கைகள், நடுவில் ஒற்றை துணித் திரை. உள்ளே சென்றதும், தன் ரவிக்கைக்குள் கைவிட்டு தன் மார்பகங்களை வெளியே திமிரச் செய்து..

ஏ பாய் அய்ஸா அய்டம் சினிமாமேபி நஹி மிலேகா ஸிர்ப் 500 ருப்யா...கோன் பஹ்லா ஆயேகா?” (இதை மாதிரி அய்ட்டம் சினிமாவிலேயே கிடைக்காது, 500 ரூபாய்தான், யார் முதலில் வருவது?)என்று கூறிக் கொண்டே ஒருவரை இழுத்து படுக்கையில் தள்ளி விட்டிருந்தாள். அவர் பதறிப்போய் எழுந்து, ருக்கோ, பாத் தோ கர்னே தோ” (நில்லுங்க பேசவாவது விடும்மா...)என்றார். இவர் பேசிக் கொண்டே இருக்க அவள் கவனியாதவளாய், மற்றவர்களை இழுக்க தொடங்கினாள். ஒருவருக்கு அங்கே துணிச்சல் வராததால், அனைவரும் வெளியேற முயற்சிக்க...

அந்தர் ஆ கயா நா 500 ருப்யே தோ தேனா படேகா.”( உள்ளே வந்திட்டீங்க இல்ல, 500 ரூபாய் தந்துதான் ஆகணும்) என்று மிரட்ட தொடங்கிவிட்டாள்.

ஓட்டுனர்-நண்பர் காவல்துறையைப் போல வெட்டப்பட்டிருந்த தன் முடியை காண்பித்து, தாங்கள் பரிசோதனையிட வந்ததாகவும், காவல்துறையில் உயர் பதவியில் இருப்பதாகவும் கூற, உடனே எங்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டாள்.

பிறகு, ஒரு மதுக்கடைக்கு சென்று மதுவையும், உணவையும் வயிற்றுக்குள் நிரப்பிக் கொண்டு, ஒவ்வொரு விடுதியாய் சென்றோம், ரோட்டில் தரகு வேலை பார்க்கும் ஒருவன் நண்பனை போன்ற பேச்சுப்பாவனையோடு சலிக்காமல் ஒவ்வொரு விடுதிக்காய் அழைத்துச் சென்றான். விடுதிக்குள் நுழைந்ததும், மென் விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அறைக்குள் ஷோபாவில் அமர்ந்ததும், கதவை பூட்டிவிட்டு பெண்களை வரவழைத்தான் அந்த ப்ரோக்கர். வரிசையாக பெண்கள் வந்து நின்றனர். சிலர் சோர்விலும், சிலர் சோற்று பருக்கைகள் கைவிரலிடுக்கிலும், சிலர் உறக்கத்தை இமைகளுக்கு நடுவிலும் சுமந்தபடி வந்து நின்றனர். 5 நபர்களுக்கும் பெண்கள் தேட, 2 பெண்களுக்கு மேல் இவர்களின் ரசனைக்கு யாரும் தேராததால், மற்றொரு விடுதிக்கு சென்றனர். இப்படியே இந்த படலம் இரவு 12 மணி தொடங்கி, அதிகாலை 3 மணிவரை தொடர்ச்சியாக நடந்தது. இறுதியில் களைப்புற்று, இந்த விடுதியில் எப்படியான பெண்கள் இருந்தாலும் அவர்களோடு நேரத்தை கழித்துவிட்டு கிளம்பலாமென்று முடிவு செய்துவிட்டே உள்ளே நுழைந்தனர். கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்று அங்கிருந்த பெண்களில் 5 பேரை தேர்ந்தெடுத்தனர்.

கட்டிலின் மீது போடப்பட்டிருந்த மெத்தையின் நடுவில் அந்த ஆந்திர இயக்குனர் அமர்ந்து கொள்ள, அந்த பெண்கள் அவரை சுற்றி அமர்ந்து கொண்டனர். அதில் ஒரு பெண் எழுந்து வந்திருந்த ஒரு நண்பரின் தோளில் கைபோட்டுக் கொண்டு, ஏதோ பலநாள் பழகியவள் போல் உரையாடிக் கொண்டிருந்தாள், அவரும் ஏதோ நீண்ட நாளாய் உயிருக்கு, உயிராய் காதலித்ததுபோல் உரையாடிக் கொண்டிருந்தார். அந்த ஆந்திர இயக்குனர் தன் அருகில் இருந்த பெண்ணின் தொடையை தட்டி, ச்சீ, என்ன இத்தனூண்டு டிரெஸ் போட்டிருக்கே. என்று சொல்ல.... அந்த பெண் ஏதோ கொஞ்சம் அதீத கோபம் வந்தவளாய்,

ஜிஸ் காம் கே லியே ஆயா, ஓ கர்கே நிகல் ஜானா, ஐஸா சவால் முஜே நா பூச்னா. க்யா சமஜ் ரகா முஜே” (என்ன வேலைக்கு வந்தியோ, அதை முடிச்சிட்டு போய்ட்டே இரு, இதை மாதிரிலாம் கேள்வி கேட்காதே, என்ன நினைச்சிட்டு இருக்கே என்னை?)

என்று திட்டிவிட்டு எழுந்து நகர்ந்து விட்டாள். அந்த பெண்ணின் சுயமரியாதை மெய்யாலுமே அழகாய்த்தான் இருந்தது. சமீபத்தில் ஒரு நீதிமன்ற தீர்ப்பில், பல நபர்களோடு உறவு வைத்துக் கொண்ட பெண்ணாக இருந்தாலும், அவள் முன்வைக்கும் புகாரை அவள் நடத்தையை முன்வைத்து புகாரை நிராகரிக்க முடியாது.

மதுவும், இதர பண்டங்களும், பெண்களுமாய் இருந்த அந்த சூழல் ஒரு சில நிமிடத்தில் ரணகளமாகி விட்டிருந்தது. திட்டு வாங்கிய அந்த இயக்குனருக்கு முகத்தில் ஈயாடவில்லை. அசடு வழிய சிரித்துக் கொண்டிருந்தார். அந்த பெண் அவசரமாய் சென்றதை கவனித்த வெளியில் காத்திருந்த தரகர்,

க்யா ஹுவா பாய், குச் ப்ராப்ளம் ஹை க்யா.” (என்ன சகோதரா, ஏதும் சிக்கலா?) என்று வினவினான்.

வாசல் கதவுக்கருகே நின்றிருந்த நான் விளக்கிச் சொன்னதும்,

துஸ்ரி லட்கி பேஜூன் க்யா. மதராசி லட்கி சலேகி க்யா?” என்றபடி சென்றான்.

சில நிமிடங்களில், ஐந்தடி உயரத்தில் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட் அணிந்தபடி அந்த கருத்த நிறப் பெண் உள்ளே வந்தாள்.

என்னங்க, அவர் கிண்டல் பண்ணதுக்கே அந்த பெண் ஓடிடுச்சு, இதுக்கே இப்படின்னா, இந்த மாதிரி தொழில்கள்ல எப்படி?” என்று நான் கேட்டதுதான் தாமதம்.

உங்ககிட்ட பேசுறதுக்கோ, கிண்டல் பண்றதுக்கோ, என்னங்க இருக்கு, சொல்றதுக்கு ஒண்ணுமில்லாதவங்ககிட்ட?” என்று படபடவென பொறிந்து தள்ளிவிட்டாள்.

எனக்கோ அவள் சொன்னது, எங்களுக்கு இந்த உலகத்திடம் சொல்ல ஒன்றுமில்லை, அதற்கான தகுதியும் இந்த உலகத்தில் இல்லை.என்றதுபோல்தான் கேட்டது.

சில நிமிடங்களில் மீண்டும் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த தரகர்,

யஹா பைட்கே பாத் கர்தே ஹி ரகேங்கே க்யா? ஹர் ஏக், ஏக் லட்கி கோ லேக்கர், அப்னே அப்னே கம்ரே மேன் ஜாவ், அய்ஸா நஹி சலேகா ( இப்படியே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பீர்களா, தத்தமது அறைக்கு ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு செல்லுங்கள், இப்படியே பேசிக் கொண்டிருப்பது செல்லாது) என்றான்.

அப்படியே ஒவ்வொருவரும் தத்தமது அறைக்கு ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றனர். அவளை மட்டும் வந்திருந்தவர்கள் தேர்வு செய்யவில்லை. நானும் அந்த பெண்ணும் மட்டும் மீந்து நின்றோம், தரகர் என்னைப் பார்த்து ஏதோ வினவுவது போல கண்ணசைத்தான். நான், “இந்த பெண்ணை என்னோடு அழைத்துச் செல்கிறேன்.என்றேன்.

அறைக்கான திசை காண்பிக்கப்பட்டது. நானும் எனது பையை எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் சென்றேன். உள்ளே சென்றதும், எனக்கு புகைக்க வேண்டுமென்றேன். அறைச்சேவகன் ஒருவனை அழைத்து எனக்கு தீப்பெட்டி வாங்கித் தந்தாள். நான் புகைத்தபடியே அமர்ந்திருந்தேன். அவளை வந்து அமருமாறு அழைத்தேன். அவள் காத்திருக்குமாறு கூறுவிட்டு வாசலிலேயே நின்றாள். அதே சேவகன் ஒரு வெள்ளைத் துண்டை கொண்டு வந்து கொடுக்க, அவள் அதை வாங்கி என்னிடம் தந்தாள். நானும் வாங்கி என் அருகில் அதை வைத்தேன். அதை வைத்தபடியே,

இப்படியான தொழிலைச் செய்கிறீர்களே, ஏதும் பாதுகாப்புக்குப் பயன்படுத்துவதில்லையா?” என்றேன்.

அந்த துண்டைத் திறந்து பாருங்கள். என்றாள். திறந்தேன், உள்ளே ஆணுறை இருந்தது. கழிவறைக்குச் செல்வதாக சொல்லிச் சென்றவள், சிறுது நேரத்தில் வந்து அறைக் கதவை தாழிட்டாள்.

அறையை மெல்லிய மின்விளக்கின் வெளிச்சம் பரப்பி நின்றது. நானும் புகைத்து முடித்தேன். அருகில் அமர்ந்திருந்தவளிடம் அப்புறம் என்ன?” என்றதும்,

தம் உடையை கழற்றத் தொடங்கினாள். நான் பதறிப் போய்,

ஏய் நான் சும்மா சொன்னேன். நாம் அமர்ந்து பேசலாம். என்றேன்.

என்ன பேசவேண்டும்?” என்று நமட்டு சிரிப்போடு தலையை கீழே கவிழ்த்தபடி அமர்ந்தாள்.

நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன், நான் இங்கே வந்தது தெரிந்தாள் கொன்றுவிடுவாள். நீங்கள் யாரையாவது காதலிச்சிருக்கீங்களா?” என்றேன். பொதுச்சமூகத்தில் உலவுகின்ற திமிர் கண்டிப்பாக அந்த சொற்களில் தொனித்திருக்கும் என்றே நம்புகிறேன். சட்டென வந்தது அவளிடமிருந்து ஒரு பதில்.

அதென்ன, காதலிச்சிருக்கீங்களா? நான் காதலிக்கிறேன், இப்பவும். நான் சென்னை பொண்ணு, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு இருந்தேன். திடீர்னு அப்பா தவறிட்டார், பெருத்த பொருளாதார சிக்கல், ஒரே தம்பி அவனும் படிக்கணும், ஆக, நான் படிப்பை நடுவில் நிறுத்திட்டு வேலைக்கு போகத் தொடங்கினேன், அங்கேதான் அந்தப் பையனை சந்திச்சேன், ரொம்ப நேசிச்சோம், அந்த வேளையில் பெங்களூர்ல வேலை இருக்கிறதா ஒரு பொண்ணு சொல்லி பெங்களூர் போனேன், அங்கேயிருந்து ஒரு கும்பல் என்னை இங்கே கடத்திட்டு வந்திடுச்சு, ரெண்டு வருசமா இங்கேதான் இருக்கேன், நான் நேசிக்கிறவனுக்கு நான் தகுதியுள்ளவளா நான் என்னை கருதலை, அதனால், அவனைவிட்டு விலகிவிட்டேன், அவன் நான் அவனை ஏமாற்றிவிட்டதாக கருதிக் கொண்டிருக்கிறான். இன்றும், எனது நண்பர்களுக்கு வாரம் ஒருமுறை அழைத்து, அவன் எப்படியிருக்கிறான் என்று விசாரிக்கத்தான் செய்கிறேன். ஆக, நான் இப்பவும் காதலிக்கத்தான் செய்கிறேன்.

அதெல்லாம் சரி, இவ்வளவு பேசுற நீங்க ஏன், முகத்தை கீழே வச்சிக்கிட்டு பேசுறீங்க, என்னை பாத்து பேசுறதுக்கு அளவுக்கு கூட எனக்கு தகுதியில்லையா?” என்றேன்.

அப்படியில்லை, நான் சென்னைப் பொண்ணு. வேற மொழிக்காரங்க வருவாங்க, வாய்ல வெற்றிலை எச்சிலோடு வருவாங்க, வாய்நிறைய மதுநாற்றத்தோடு வருவாங்க, அப்பல்லாம் வராத குற்றவுணர்வு,கோபம், கழிவிரக்கம், இங்கே யாராவது தமிழர்கள் வந்தால் எனக்கு வந்துவிடும், உடலெல்லாம் கூசுவது போல இருக்கும், அதனால்தான் உங்கள் முகத்தை பார்த்து பேச முடியவில்லை. என்றாள்.

என்னால பேசவே இயலவில்லை, நான் பேசுகின்ற மொழி, முடிந்தளவு தூயத்தமிழில் பேச முயற்சிப்பது பிறருக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றுதான் நினைத்திருந்தேன், தேமதுர தமிழோசை கேட்டிடல் இன்பமென்றுதான் நினைத்திருந்தேன், ஆனால், அது அப்படியில்லாதிருக்கக் கூடும், அது துன்பம் தரக்கூடியதாகவும் இருக்குமென்று அன்றுதான் உணர்ந்தேன்.

மெல்ல அவளது கைகளைப் பற்றிக் கொண்டு, முகத்தை மறைக்க முன் வந்து விழுந்திருந்த முடியை விரல்களால் நீக்கி, உன்னிடம் கடைசியாக யாராவது அன்பாக பேசி எத்தனை ஆண்டுகள் கடந்திருக்குமென்றேன், இரண்டு கண்ணீர் துளிகளை மட்டும் பதிலாய் தந்தாள். வெற்று அமைதி மட்டும் அங்கே நிலவியது மொழி அங்கே தேவைப்பட வில்லை.

என்னை உன் நண்பனா நினைச்சுக்கோ, என் வீட்டுக்கு வா, புது உறவுகளை அறிமுகப்படுத்தி வைக்கிறேன், எவருக்கும் நீ யாரென்று தெரியாது, நானும் சொல்ல மாட்டேன் என்றேன்.

என்னால் இயலாது. மும்பையில் நடமாடுவதற்கு எனக்கு லைசன்ஸ் இன்னும் தரப்படவில்லை. அதோடு நான் இன்னாரென்று அறிந்து கொள்வதற்கு சிரமப்படும் உலகத்தோடு உறவாடி நான் எதை சாதிக்கப் போகிறேன். என்று சொன்னாள்.

சரி, கிளம்புகிறேன், வாய்ப்பிருந்தால் என் எண்ணிற்கு தொடர்பு கொண்டுவிட்டு தாராவிக்கு வா என்று கூறிவிட்டு எழும் பொழுது, அருகில் வந்தவள் நெற்றியில் முத்தமிட்டாள்.

இந்த முத்தம் உன் அன்பிற்கு என்று என்னை வழியனுப்பி வைத்தாள்.

அந்த முத்தத்தை தமிழுணர்வாளர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன், தன் முத்தத்தை விலைக்கு விற்க நிர்பந்திக்கப்படும் பல்-தேசிய இனப் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை களைய ஏதேனும் செயல்திட்டம் வகுக்க கோருவதற்கு நான் கொடுக்கும் லஞ்சமாகக் கூட அந்த முத்தத்தை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.