வியாழன், 26 டிசம்பர், 2013

அம்பேத்கரை ஆதரிப்பது ஒவ்வொரு சுயம‏ரியாதைக்காரரின் கடமை - பெரியார்

எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால்தான் அதை மனிதத்தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதைப் புஸ்தகப் பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும்; அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பெறுமானவர்களே ஒழிய, காரியத்திற்குப் பெறுமானவர்கள் அல்ல என்று சொல்ல வேண்டும்.

வெளிப்படையாய் நாம் பேசுவதானால், அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும் நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால், அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.

முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம்; கோஷம் இருக்கலாம்; கடவுள் இருக்கலாம்; மூடநம்பிக்கை இருக்கலாம்; மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம்; சமதர்மமில்லாமலும் இருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; நாஸ்திகர்களுக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; சமதர்மவாதிகளுக்கும், பொதுவுடைமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.

ஆனால், தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒதுக்கப்பட்டிருக்கின்ற, தாழ்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும், புழுத்த விஷக்கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவ பிள்ளை, கிறிஸ்தவ நாய்க்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லிம் என்றோ அழைக்க இடமில்லாமலும் அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்றசமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு, "எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்'' என்கின்றவன் போனால், இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும், "சரி, எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்'' என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.

நமக்குக் கடிதம் எழுதின நண்பர், "இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது; இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது; பெண்களுக்கு உறை போட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்'' என்று எழுதி இருக்கிறார். அது (உறை போட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இது, பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம்.

இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும், சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்து மதம் சீர்திருத்தமடைந்து வரவில்லை; இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம். இந்து மதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை; அதைச் சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. இந்து மத ஆதாரங்கள் என்பவை அம்மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளைப் பொறுத்ததே ஒழிய, சாமிகள் என்றும், மகாத்மாக்கள் என்றும், தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொறுத்தது அல்ல.

இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுகூலம் செய்ய, சில தீவிர சுயமரியாதைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள், அம்பேத்கர் வேறு மதத்துக்குப் போவதை அனுமதிக்கக் கூடாது என்றால் அது நியாயமாகுமா? அல்லது ஒன்றும் பேசாமல் சும்மா இரு என்பதுதான் நியாயமாகுமா? ஆதலால், அம்பேத்கருடைய முடிவை நாம் மனமார ஆதரிப்பதுடன், அம்முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவியளிக்க வேண்டியதும் ஒவ்வொரு சுயமரியாதைக்காரருடையவும் கடமையாகும் என்பது நமது அபிப்பிராயம்.
(17.11.1935 "குடி அரசு' இதழில் எழுதிய தலையங்கம்)

நன்றி : கீற்று

செவ்வாய், 24 டிசம்பர், 2013

பெரியாரின் நினைவு நாளில்....24/12/2013



பார்ப்பனரல்லாத கட்சி புதியதாக ஒன்றும் செய்துவிடவில்லை. மனு ஸ்மிருதியை தலைகீழாக மாற்றினர். அதை தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டனர். மனு சூத்திரர்களுக்கு எந்த இடத்தை கொடுத்தாரோ அந்த இடத்தை பார்ப்பனர்களுக்கு கொடுத்தார்கள்.

ஒருவன் பார்ப்பனன் என்பதற்காக மனு அவனுக்கு சலுகைகள் அளிக்கவில்லையா? 
சூத்திரர்கள் உரிமைகள் பெற தகுதி பெற்றிருந்தும் மனு அந்த உரிமைகளை மறுக்கவில்லையா? இப்பொழுது சூத்திரர்கள் என்பதற்காகவே சில சலுகைகள் அளித்தால் அதைப் பற்றி குறை கூற முடியுமா? அது அபத்தமாக தோன்றலாம்.

ஆனால், இந்த விதிக்கு முன்னுதாரணங்கள் இலலாமலில்லை. மனு ஸ்மிருதி தான் அந்த எடுத்துக்காட்டு. 

பார்ப்பனர்கள் அல்லாத கட்சியின் மீது யார் கல்லெறிய முடியும். பார்ப்பனர்கள் பாவம் செய்யாமிலிருந்தால் அவர்களால் முடியும். ஆனால், மனு ஸ்மிருதியை உயர்த்தி பிடிக்கும், வணங்கிப் போற்றும் அவர்கள் பாவிகள் இல்லையென்று சொல்ல முடியுமா? - அண்ணல் அம்பேத்கர் தொகுதி 25, (மனுவும் சூத்திரர்களும், பக்கம் 83)

அண்ணல் அம்பேத்கர் கூறியது போல பார்ப்பனரல்லாத இயக்கம் எதை சாதித்தது என்றால், பார்ப்பனிய இந்து மத வெறிகள் சூத்திரர்களுக்கு மறுத்திருந்த உரிமைகளுக்கு பெற்றுத் தரபோராடி பார்ப்பனரல்லாத சூத்திர மக்களை அதிகாரப் படுத்தியது.

ஆனால், அப்படி அதிகாரத்திற்கு வந்தவர்கள் பெரியாரை மறந்ததோடு மட்டுமில்லாமல், பெரியாரை படமாக்கி மூலையில் போட்டு விட்டு, அந்த அதிகாரத்தை தலித் மக்களுக்கு எதிராக தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே இதுகாறும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். 

இந்த நவீன சூத்திர பார்ப்பனர்கள் பெரியாருக்கு துரோகம் செய்வதோடு மட்டுமில்லாமல்...பெரியாரை எதிர்த்து வலதுசாரிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு, தங்களுடைய தலித் விரோத நிலைப்பாட்டால், பெரியாரை தலித் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கின்றார்கள். 

பெரியார் கிராம பொருளாதாரம் என்பதை மிகக்கடுமையாக எதிர்த்திருக்கிறார். ஊர் - சேரி கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், அவரது காலத்திலும், அதற்கு பின்னும் இன்றுவரை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

ஊர்- சேரி கட்டமைப்பை கட்டிக்காக்கும் பொருளாதாரம்சார் சிக்கல்களை ஆய்ந்து, அந்த கட்டமைப்பை தகர்க்கும் வேலைதிட்டத்தோடு அடுத்த கட்டத்திற்கு நகர்வதையே...பெரியார் ஓருவேளை தொடர்ந்து வாழ்ந்திருந்தால் செய்திருப்பார்.

அப்படியல்லாமல் தற்போதைய நிலையே தொடருமானால், பெரியாருக்கு தொடர்ந்து இழுக்கை தேடிக் கொடுப்பதோடு, இந்துத்வ கும்பல் உழைக்கும் மக்களை பிளவுப்படுத்தி தங்கள் நலன்களுக்கான வெற்றிகளை ஈட்டுவதற்கான சூழலே உருவாகும்.